பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


தாடைகள் அசைந்து கொண்டிருக்கும் வாய் இயக்கம் முதுமைக்குரிய தோற்றம்தான்.

அடுத்தது தள்ளாட்டம் தரும் மயக்கம். இது பொதுவான பலஹீனத்தால் மட்டும் வருவதல்ல. பல காரணங்களால் வரும். பொதுவாக, ஒரு காரணத்தை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரைச்சலுக்குரிய மூலஸ்தலமாக நமது காது இருக்கிறது. இந்த காதின் உட்புறத்தில்தான், சம நிலை ஈர்ப்புப் பகுதி (Equilibrium) அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் இரைச்சல் அதிகமாகி, உடலை நிலைநிறுத்தி நேராக வைக்கின்ற சமநிலை ஈர்ப்பு பாதிக்கப்படும் போதுதான். தள்ளாட்டமும் தடுமாற்றமும் உண்டாகிறது.

இன்னும் உடலுக்குள் அதிகமாகிக் கொண்டே வருகிற இரத்த அழுத்தமும், கடினமாகிக் குறுகிப்போகின்ற மூளையின் இரத்தக் குழாய்களும் இதுபோலவே தடுமாற்றத்தை (Dizziness) ஏற்படுத்துகின்றன.

மூன்றாவது வகை நோய்த் தன்மை உறக்கமின்மையாகும். இளைஞர்களே நிறைய நேரம், நீண்ட நேரம் உறங்குகிறார்கள். முதியவர்களோ அடிக்கடி விழித்துக் கொண்டு, தூக்கம் வராமல் அல்லாடுகின்றார்கள்.

இதற்குக் காரணம், முதுமைக்குள்ளாகுபவர்கள், தங்கள் நிலைமை, உள்ளதைவிட மிகைப் படுத்திக் கொண்டு, உணர்ச்சி வசப்படுவதால்தான். ‘நமக்குப் பாதுகாப்பில்லை’ மற்றவர்களிடையே மதிப்பில்லை. ‘ஜென்மம் வீணான ஜென்மம்’ இப்படியெல்லாம் கற்பனைக் கவலைகள் எனும் காட்டுக் குதிரைகள் மீது ஏறிக் கொண்டு காடுமலை மேடு பள்ளம் சுற்றும்போது, கண்களுக்கு உறக்கம் எப்படி வரும்?