பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

103



ஆகவே ஓய்வு தரும் உறக்கத்தை நாம் உதாசீனப்படுத்தாமல், உடலுக்குத் தருகின்ற ஒத்துழைப்பே என்று நாம் கருத வேண்டும். உடலானது ஓயாமல் உழைக்கும் எந்திரமல்ல என்பதை புரிந்து கொண்டால், உரிய நேரத்தில், உயர்ந்த வகையில் உடல் உதவும். உலகை அனுபவிக்க உற்சாகமாக வழியும் செய்யும்.

நிம்மதியாக மனம், நல்ல உழைப்பு, வயிறார உணவு, இவையெல்லாம் நிம்மதியான உறக்கத்திற்குத் தூதர்களாகும். அமைதியான இடம், இருளான பகுதி, இளஞ்சூடான வெப்பச் சூழ்நிலை, வசதியான படுக்கை, நிம்மதியான உறக்கத்திற்குத் துணை செய்வனவாகும்.

தலையணை தேவையா தூங்குவதற்கு என்பார்கள், தேவைதான், முதுகெலும்புத் தண்டானது நேர்க் கோட்டில் இருப்பதுபோல, தலையணையின் உயரம் இருந்து படுத்துக் கொண்டால், அது நல்லது என்கிறார்கள். உயரமான தலையணையுடன். முதுகு வலியும் வருவதுண்டு.

இதனை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளுங்கள்.

‘யார் படுத்தவுடன் உறங்குகிறாரோ, அவரே பாக்கியவான்’ என்று கூறலாம். கனன்றெழும் கவலைகளை கிட்டே அணுகவிடாமல் வெல்லும் கெட்டிக்காரரல்லவா அவர்!

படுக்கைக்குப் பாயும் பிரச்சினைகளை படையெடுக்க விடாமல், விரட்டும் பாங்கினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பலம் மட்டுமல்ல வளமான வாழ்க்கையும் அமையும். இன்பமயமான சூழ்நிலை எப்பொழுதும் நிலவும்! அதற்கு உறக்கமே உற்ற துணையாகும்.