பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



நல்ல வாழ்க்கைதான் நமது இலட்சியம். அந்த இலட்சியத்தை ஏற்று நடத்திச்செல்லும் இனிய தலைவன் தான் நமது உடல். உடலை வைத்துத்தானே உலக வாழ்க்கை நடக்கிறது! உடலையும் அதற்குள்ளே ஒய்யாரமாய் ஒளிந்து கொண்டு உணர்வினை எழுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கின்ற உள்ளத்தையும் வைத்துக்கொண்டுதானே நமது இனிய பயணத்தைத் தொடர வேண்டும்?

செல்லும் பயணம் இனிமையாக வேண்டும். வெல்லும் உடலும் உள்ளமும் திடமாக இருக்க வேண்டும். திடமில்லாத உடல் அடிக்கடி சுருண்டு படுத்துக் கொள்ளும். அதைத்தான் நாம் நோய் என்கிறோம்.

நோய் என்றால் என்ன? ‘உன்னோடு ஒத்துழைக்க மாட்டேன்’ என்று உடல் ஒத்துழையாமல் படுத்துக் கொள்வதைத்தான் நோய் என்கிறோம். இந்த நோய் இருவகையாக அமைந்து விடுகிறது.

ஒன்று மெய் நோய். மற்றொன்று பொய் நோய். இந்தப் பொய்யும் மெய்யும்தான் இருளும் ஒளியும் போல, மேடும் பள்ளமும் போல. வாழ்க்கையில் வந்து வந்து போகிறது. இதனை நாம் நன்கு புரிந்து கொண்டால், நோயற்ற வாழ்க்கை வாழலாம்.

அந்த இனிய வழிகளை இனி நாம் தொடர்ந்து காணலாம்.