பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

49


பாவத்துக்குத் துணைபோன பாலாம்பாள் பாவம், வலது கையை இழந்து அங்கே புலம்பிக் கொண்டிருந்தாள். ஊரைப் பற்றி வம்பளந்து, வதந்தியைப் பரப்பி மகிழ்ந்து கொண்டிருந்த வனிதாமணி, வெளியே தலைகாட்ட முடியாமல் போனதுடன், இனி வேகமாகப் பேசவும் முடியாது, வகையாக உண்ணவும் முடியாது என்ற இழிவான நிலைமையில், பரிதாபகரமாகப் படுத்திருந்தாள்.

ஊரார் வயிற்றெறிச்சலைக் கொட்டிக் கொள்வதில், உண்மை இன்பம் கண்ட அவள் பரிதாப நிலையைக் கண்டு, உள்ளம் வருந்துகிறோம் என்று வெளியே சொன்னாலும், பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும், இனி இந்தப் பொல்லாப்பு நேராது என்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்கள்.

படித்தவள், நல்ல பதவியில் இருப்பவள். பணவசதி படைத்தவள் வனிதாமணி.

பிறரைப் பற்றிப் பேசியே பூரிப்பும், பெருமையும் கொண்டு திரிந்த அவளுக்கு, தெய்வமே நல்ல தண்டனை அளித்துவிட்டது. தெய்வம் நின்று கொல்லும், அரசன் அன்று கொல்லும் என்ற பழமொழி இப்பொழுது மாறிக் கொண்டல்லவா வருகிறது!

அப்பொழுதைக்கப்பொழுதே தெய்வம் தண்டித்து, நல்லவர்களை நல்ல பாதையிலே நடத்தி வைத்தும், தீயவர்களின் வழியை மாற்றி வைத்து வருகிறது என்ற உண்மையை வனிதாமணி, காலம் கடந்து புரிந்து கொண்டாள். பாலாம்பாளும் புரிந்து கொண்டாள்.