பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



வளமான வயலில்தான் தரமான பயிர்கள் விளைகின்றன. உரமான மரங்களில்தான் உயர்வான பழங்கள் கொழிக்கின்றன. அதுபோலவே, வலிவான உடலில்தான் வளமான மனம் இருக்கும்.

நல்ல உடல் மனம் என்பதுதானே பழமொழி! அதை ஏன் நாம் அடிக்கடி மறந்து போகிறோம்?

பொய் நோய்கள் வரும். அடிக்கடி வரும், தள்ளத் தள்ள மீண்டும் வரும். விரட்ட, விரட்ட திரும்பி வந்து மிரட்டும். என்றாலும், பொய் நோய்களைக் கண்டு பயந்து, பதறி வாழ்க்கையை சுமையாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைத்தான் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொய் நோய்களின் பலத்தை ஒழிக்க வேண்டுமானால், உன்னத நலத்தைக் காத்துக் கொண்டால்தான் முடியும். பதமறிந்து நோய்களை நம் வசப்படுத்தி, தலை தூக்காமல் செய்து கொள்கின்ற சாதுர்ய பண்புகளைப் பெற வளமான உடலால்தான் முடியும்.

வளமான உடல் என்பதோ நோய் அணுகாத உடல். நோயால் நலியாத உடல். நோய்கள் மேயாத உடல். நோகச் செய்யும் நோய்களை வந்த பிறகு போக்க முயல்வதைவிட, வராமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.

வராமல் எப்படி தடுப்பது? இனி அடுத்த பகுதியில் இதனைக் காண்போம்.