பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

59


1. மெய்யும் நோயும்

தனக்குவமை இல்லாமல் மனக்கவலைகளை வாரி இறைத்து, மாயமானாக அலைந்து மயக்கி, கானல் நீராகத் தோன்றி அலைக்கழித்து, ‘என்னவென்று சொல்லத் தெரியவில்லையே’ என்று ஆட்பட்டவர்களை இனம் புரியாமல் திண்டாடச் செய்து, திகைத்திட வைக்கின்ற மனநோயை பொய் நோய் என்றும், உடலில் தோன்றும் நோய்களை மெய்நோய் என்றும் இரண்டாகப் பிரித்திருந்தோம். உடலாகிய ‘மெய்யில்’. உண்மையாக என்னவென்று உணர்வதுபோலத் தெரிவதால், மெய்நோய் என்று இங்கே தந்திருக்கிறோம்.

‘உங்களுடன் இனி ஒத்துழைக்க முடியாது. களைத்துப் போய்விட்டேன். இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று ஒத்துழைக்க உடல் மறுத்து, ‘ஸ்டிரைக்’ செய்கின்ற நிலையைத்தான் ‘நோய்’ என்கிறார்கள் பெரியோர்கள்.

மனதிற்கு வயதில்லை. அது என்றும் இளமைதான். தசையாலும் எலும்புகளாலும் ஆன நம் தேகத்திற்கு இளமையும் உண்டு. நாளாக நாளாக முதுமையும் உண்டு. இளைப்பும் களைப்பும் உண்டு.

ஆகவே, மனதின் வேகத்திற்கு மார்க்கம் காட்ட முடியாத அலைச்சலிலே, இரவு பகல் பாராது உடலை வாட்டிவதைக்கும் பொழுது மட்டுமல்ல, அதனை வாய்ப்பாகக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகின்ற வேலையிலும் ‘உடலானது நோய் என்று படுத்துக் கொள்கிறது. ‘படுத்தி’ வைக்கிறது’.