பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



வந்தபின்தான் உடலை நாம் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறோமே தவிர, வருவதற்கு முன் தடுத்துக்கொள்ள முயல்வதில்லை. ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்று வள்ளுவர் பாடுவதற்கேற்ப, நெருப்பில் விழுந்த துரும்பு போல, உடலைக் காவாதார் வாழ்க்கை முடிந்து போகும்.

ஆக, வந்த பிறகு வைத்தியரிடம் செல்வதைக் காட்டிலும், வராமல் தடுக்கின்ற விதங்களைக் கற்று, பின்பற்றி வாழ்பவரே அறிவுடையோராவார்.

காட்டிலே ஒரு இராணுவ வீரன் பயணம் செய்து கொண்டிருக்கிறான். வழியிலே அழகான சிங்கக்குட்டி ஒன்று அநாதையாகக் கிடக்கிறது. அதைப் பார்த்ததும், தூக்கித் தழுவி, தடவிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வேகம் பெறுகிறது.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, குட்டியைத் தூக்குகிறான், தடவுகிறான், தழுவுகிறான். அத்துடன் அவன் ஆசை அடங்கிவிடவில்லை. அணைந்து போகவில்லை. தொடர்கிறது. மனம் துணிகிறது.

வீட்டுக்குக் கொண்டுபோய் வளர்க்க வேண்டும் என்ற வேட்கை. கையுடன் கொண்டு போகிறான். குழந்தையைக் காப்பது போல, ‘கண்ணிமை காப்பது போல’, சிங்கக் குட்டியை வளர்க்கிறான்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது சிங்கக் குட்டி. ஒவ்வொரு முறை அவன் வெளியேபோய் வீட்டிற்குத் திரும்பும் பொழுதெல்லாம், ஒரு புதுமை.