பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



வளர்ந்த சிங்கத்திடம் வளர்த்தவன் பயப்படுவது போல, தீய பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்ட நாம், நம் தேகத்திற்கும் வாழ்க்கைக்கும் முடிவு வந்திருக்கின்றது என்று தெரிந்தவுடன்தான் அந்த ‘ஞானோதயம்’ பிறக்கிறது.

‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே, சாகப் போகிறவன் ‘சங்கரா சங்கரா’ என்று புலம்புவதாகக் கூறுவார்களே, அதுபோல, தீய பழக்கங்களை முதுகிலே சுமந்து கொண்டு திரிந்ததன் பலன் நோயாக முகிழ்த்து. முற்றி வதைக்கின்ற பொழுதுதான் நிலைமை புரிகிறது.

நோய் நிலைமையை நாம் சற்று மறந்து, நோய்க்குப் பாயாகக் கிடைக்கும் தேகத்தினை முதலில் பார்ப்போம். வாழ்க்கைப் பயணத்தின் மோகனம் நிறைந்த வாகனமாக அல்லவா நமது தேகம் பயன்படுகிறது. சுவர் இல்லாமல் சித்திரமா? உடல் இல்லாமல் உலக வாழ்க்கையா? கண்ணிரண்டை விற்று ஓவியம் வாங்குகிற புத்திசாலியைப் போல, உடலைக் கெடுத்து உலக இன்பம் அனுபவிக்க முயன்றால் முடியுமா?

நமது உடலின் மகிமை என்ன? திறமை என்ன என்று நாம் ஒருமுறை உணர்ந்து, புரிந்து கொண்டால், அதன் பின்னர் அதனை முறையுடன் பின்பற்றத் தொடங்கிவிட்டால், பெறும் இன்பந்தான்! என்னே! பேரின்பம் அல்லவா தோன்றும்!