பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


7. உடலும் தூய்மையும்

உடலைக் காக்க, உருவாக்க, நோயின்றி இருக்க உணவும் நீரும் மட்டும் போதாது. உடலைத் தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டும். ‘சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழியை அறியாதார் யார்?

உடல் அழகைத் தூய்மை என்பார்கள். உள்ளத்து அழகை வாய்மை என்பார்கள். வாய்மையும் தூய்மையும் தான் ஒருவரது வாழ்க்ககையை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வல்லமையை வழங்குகிறது.

நீரால் அமையும் புறத்தூய்மை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. காலையில் நீராடல் கடமை என்று பெரியவர்கள் போதிக்கின்றார்கள். ‘கடனே’ என்று பயந்து கொண்டு குளிப்பவர்கள் உண்டு, தேவையா இது, என்று விவாதிப்பவர்களும் உண்டு.

அழகான உடையும், ஆடம்பர வாசனைப் பொருட்களும், சீப்பினால் அடிக்கடி தலைவாரிக் கொண்டும் இருந்தாலேபோதும் என்று வாரக்கணக்காக குளிக்காத ‘மேன்மக்களும்’ நாட்டில் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

அவர்கள் அருகில் வந்ததும், ஏதோ அசாதாரண தன்மையில் ‘வாடை’ வந்து உலவுவதையும் நீங்கள் முகர்ந்திருப்பீர்கள். அது உடலைத் தூய்மைப்படுத்தாதது தான் என்று உணர்ந்தும் இருப்பீர்கள். மிருகங்கள் கூட தண்ணீரில் மூழ்கி சுகம் பெறும் போது, மனிதர்கள் அதனை வெறுத்துக் கிடப்பதையும் நம்மால் ஏனோ புரிந்துகொள்ள முடியவில்லை!