பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

"அதை வை! இதை வை! தயிர் ஊற்று! பழத்தை உரித்துப் போடு!” என்று கட்டளைகள் இட்டுக் கொண்டேயிருந்தாள்.

நெடுமாறன் தன் வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டே தனக்குள் இவ்வாறு நினைத்துக் கொண்டான். "இந்த தேவதைக்கு மூக்கு சிறியதாக இருக்கிறது. அதுதான் அழகானது என்று அவளைச் சுற்றியிருப்பவர்கள் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். இவள் பெரிய வாயாடியாக இருக்கிறாள். இவள் மிகக் குறைவாகப் பேசுவதாக மற்றவர்கள் பாராட்டி யிருக்கிறார்கள். நான் இங்கு வந்தது நல்லதுதான் நம் முன்னால் நம் குறைகளை மறைத்து நம்மைப் பெரிதும் போற்றிப் பேசுகிறவர்கள் உண்மைகளை எவ்வளவு தூரம் நாம் உணராதபடி மறைத்து விடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்! இது போன்ற துதிபாடும் புழுகவுரையார்களை இனி நான் என் அருகிலும் அண்டவிடமாட்டேன். உள்ள குற்றத்தை மறைத்து இல்லாத குணங்களை ஏற்றி பாடும் பாதகர்களை என்னிடம் நெருங்க விடமாட்டேன்!” என்று நெடுமாறன் நினைத்துக் கொண்டான்.

ஆனால் பாவம்! அவனுடைய மூக்கைப் புகழ்ந்து சொன்னவர்கள் அவனை எவ்வளவு முட்டாளாக்கி விட்டார்கள் என்பதை அவன் உணரவேயில்லை!

நெடுமாறன் பசிதீரச் சாப்பிட்டு விட்டு "அப்பாடா!" என்று உட்கார்ந்த போது கிழத்தேவதை "இளவரசே! உன் முகத்தைக் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பிக் கொள். உன் மூக்கின் நிழல் என் சாப்பாட்டுத் தட்டில் விழுந்து தட்டில் என்ன இருக்கிறதென்று நான் பார்க்க முடியாமல் செய்கிறது. ஆமாம் போதும், அவ்வளவு போதும்! என்னவோ உன் மூக்கு இருக்கிற நீளம் எனக்கு ஏதோ போல் இருக்கிறது!" என்றாள்.