பக்கம்:நூறாசிரியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

97


20 நகையாகின்றே!


இதுகொல் விழவே; நகையா கின்றே!
புதுமடிக் கலிங்கங் கதுமத் தாங்கி
உழுந்தின் கொழுமாப் புழலை முக்கிப்
பயறு தலைப்பெய்த பாஅல் மிதவை
வயிறு முகந்தெரிய மாந்தி உயிர்ப்பறும் 5
அரம்ப மாக்கள் ஆடும்
உரந்தவிர் நாளின் ஒழுகிலா நிகழ்வே!


பொழிப்பு:

இதுவோ விழா எனப் பெறுவது: நகை விளைகின்றது. புதிய மடியுடைய மெல்லுடையைப் பெருமையுடன் உடுத்து, உழுந்தினது கொழுவிய மாவினால் செய்த புழையுடைய பண்ணியத்தை மூச்சு முட்ட உண்டு, பயறு பெரும்பான்மையுங் கலந்த பால் சேர்ந்த கும்மாயத்தை, வயிற்றின் முக முழுதும் எழுந்து தோன்றும்படி ஆர வுண்டு, செயலற்றுத் திரிதரும் விலங்கு போல்வார் ஆடிக் களிக்கும், அறிவு விலக்கப் பெற்ற முறையிலாத செயலே!

விரிப்பு;

இப்பாடல் புறம்.

புதிய உடையைப் பெருமையுடன் உடுப்பதுவும், பல பண்ணியங்களை வயிறு நிறையும்படி மாந்திச் செயலிலாது விலங்கு போல் ஆரவாரத்தோடு ஆடிக் களிப்பதுவும் ஆகிய அறிவு தவிர்க்கப் பெற்ற முறையிலாத இச்செயல் நகைப்பிற் குரியதாகுமன்றி விழா எனப்படுவதாகாது என வலியுறுத்திப் பேசுவதாகும் இப் பாட்டு

விழா என்று பொதுவிற் குறித்தமையான் குல சமய விலக்கின்றி நடைபெறும் எல்லா விழாக்களுக்கும் பொருந்துவதாகும் இக்கருத்து.

விழவு; விழு எனும் பகுதியடியாகப் பிறந்த சொல். விழு-சிறப்பு, உயர்வு.

விழா உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் மக்களிடத்துப் பரவ வேண்டி அமையப் பெறுவதாகும். அவையன்றி உடுப்பதும் உண்பதும் ஆரவாரித்தலும் செயலற்றுத் திரிதலும் ஆகிய தாழ்வும் தந் நலமும் மிக்க நோக்கம் கொண்டு விளங்கும் விழாக்கள், முறையிலாத விலங்குச் செயல்களேயாம் என்று தெருட்டிக் கூறுவதாகும் இப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/123&oldid=1221586" இலிருந்து மீள்விக்கப்பட்டது