பக்கம்:நூறாசிரியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

நூறாசிரியம்


மலர்போல் மணம் பரப்பி, மதிபோல் ஒளி நிரப்பிக் கள்போல் இளவெறி மூட்டித் தழல்போல் காய்தலுற்றுப் பிறர் எவராலும் தணிக்கவியலாத ஓங்கிய தன்மையால் காதலது வெற்றியும் ஆட்சியும் விளக்கப்பெற்றன.

எழுந்ததும் - எழுச்சியுற்றதும், அடங்கிருந்த காதலுணர்வு தலைவனால் எழுப்பப் பெற்றதை உணர்த்தினாள் என்க.

மலர் விரிய விரிய மனம் எழுவதும், மதி எழ எழ ஒளி எழுவதும், கள் உண்ண உண்ண வெறி எழுவதும், தீ அடர அடர வெப்பம் எழுவதும் இயற்கையேபோல் தோன்றிய அவன் நெருங்க நெருங்கக் காதல் எழுவதும் இயற்கையே என்றாள். அவை தடுத்தற்கியலாமைபோல் இதுவும் தடுத்தற்கியலாமையாம் என்றாள்.

அறிகிலன் - அறிந்தேனல்லன். அறிகின்ற பொறிகளைப் புறத்தே தான் பெற்றிருந்தும், புறத்திருந்து காட்சிப் பொருளாய் வந்த தலைவனாடு வந்த காதலைத் தான் அறிய வியலாது போயிற்றென்றாள். பொறியுணர்வால் அறிகின்ற தன்மை பற்றி அறியேன் என்றாள். என்னை? தலைவனைக் கண்களாற் கண்டதும் அவன் மொழிகளைச் செவிகளாற் கேட்டதும் தான் அறிந்திருந்தும், அவன் எழுப்புவித்த காதல் உணர்வு அக் காட்சியாலும் கேள்வியாலும் அறியக் கூடாததாயிற்று; உள்ளிருந்தே எழுந்து உள்ளத்தைப் பற்றியதாகலின் புறத்தே அறிகிலன் என்றாள் என்க.

படர்ந்ததும் - பரவிப் படர்ந்ததும்; அளாவி நின்றதும் எழுச்சிக்குப் பின் அவ்வுணர்வு உடல் முழுதும் பரவி நின்றதைக் கூறினாள். மலர் விரிதலுறும் பொழுதே மணமும், மதி எழலுறும் பொழுதே ஒளியும், கள் அருந்தலுறும் பொழுதே வெறியும் தழல் கொளுத்தலுறும் பொழுதே குடும் எங்ஙன் அவ்வவற்றிற் படர்ந்து தோன்றுகின்றனவோ, அங்ஙனே அவனைக் காண்டலுறும்பொழுதே காதலுணர்வும் எழுந்து தன் உள்ளத்தும் உடலுள்ளும் உயிருள்ளும் படர்ந்து தோன்றிய தென்றாள்.

உணர்கிலன் உணர்வெழுச்சிக்குக் கரணியனான தலைவனைத் தான் அறிந்தும் அவனால் எழுப்பப்பெற்ற உணர்வை அறியாது போனதால் அறிகிலன் என்றவள். அஃது அகத்தே ஊடுருவி அளாவிப் படர்ந்த தன்மையை உணர்கிலன் என்றாள். பொறியறிவுக்குப் படும் அளவில் புறத்தே பருப்பொருளாய் நின்ற பொழுதே அறியாதவள், உணர்வுக்குப் படும் அளவில் அகத்தே நுண்பொருளாய் நின்றதை உணரக்கூடுமோ என்று இயல்புணர்த்தினாள் என்க.

புறத்தே பருப்பொருளாய் நின்றதென்றது காட்சிக்கும் கேள்விக்கும் பிற பொறியறிவிற்கும் பொருளாகி நின்ற தலைவனை என்க. நுண்பொருளாய் நின்றதென்றது அத்தலைவனாகிய பருப்பொருளினின் றெழுந்து வந்து உயிரொடு அளாவிப் பிணைந்த அன்புணர்வினை என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/132&oldid=1220741" இலிருந்து மீள்விக்கப்பட்டது