பக்கம்:நூறாசிரியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

107


மலர்புறத்தே பருவாயும், அதனின்றெழும் மணம் நம்மை அளாவுமிடத்து அருவாயும், மதிபுறத்தே பருவாயும், அதனின்றெழும் ஒளி நம்மை அணுகுமிடத்து அருவாயும், கள் புறத்தே பருவாயும் அதனின்றெழும் வெறி நம்மிற் கலக்குமிடத்தே அருவாயும், தீ புறத்தே பருவாயும் நம்மைத் தெறுமிடத்து அருவாயும் நிற்றல்டோல், தலைவன் புறத்தே பருவாயும் அவனின்றெழுந்த அன்புணர்வு அருவாயும் நிற்றல்பற்றி முன்னதை அறிவதும் பின்னதை உணர்வதும் என வேறுபடுத்திக் கூறினாள் என்க.

மடுத்தலை - மடுவினிடத்தே.
கொணர்நீர் கொணர்ந்த நீர்,

கொணர்தலென்பது கொண்டுவரல் என்பதினின்றுவேறுபட்டது. கொண்டுவருதல் என்பது ஈரிணைப்பொருசொல்லாயினும் வருங்கால் கையோடு எடுத்துவரல் என்னும் பொருளது. கொணர்தல் என்பது இங்கிருந்து போய் எடுத்து வருதல் என்னும் பொருளது. இஃது ஆங்கிலத்தில் உள்ள Bring, Fetch என்னும் இரு சொற்களைப் போன்றது.

வேண்டி - விரும்பி. மடுவினின்று கொணரும் நீரை அருந்த விரும்பி.

தலைவியொடு உரையாட விரும்பிய தலைவன் அவள் கொணரும் நீர்வேட்டு நின்றான் என்க.

எடுத்த தோள் - திரண்டு எழுந்த தோள்.

கள்வன் - நெஞ்சைத் திருடிய தலைவன்.

எதிர்ந்த ஞான்றே! எதிர் வந்து நின்றபொழுதே!

தலைவன் நீர் வேட்கையுற்று எதிர்வந்த நின்றபொழுதே தன்னுள்ளத்து மலருள் மணம்போலும் மதிக்கண் ஒளிபோலும் கள்ளுள் வெறிபோலும் தழலுள் தெறல் போலும், உளத்துள் காதல் எழுந்து படர்ந்தது. அதனை யான், அறியவும் அறிகிலேன், உணரவும் உணர்கிலேன் என்று அவனைப் பிரிதலுற்ற தலைவி, தோழியிடம் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தினாள் என்க.

இது குறிஞ்சியென் திணையும், பிரிவிடையாற்றாத தலைவி தோழிக்கு உரைத்தது என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/133&oldid=1220744" இலிருந்து மீள்விக்கப்பட்டது