பக்கம்:நூறாசிரியம்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

115


கோவை,ஈரோட்டைச் சேர்ந்த வேங்கட இராமசாமி என்னும் இயற்பெயர் கொண்டவர், தம் செயற்கரிய செயல்களால் பெரியார் எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பெறும் தன்மையை உறுதிப்படுத்தி, வாழ்த்திப் பாடியதாகும் இப்பாட்டு.

தொன்மையும் பெருமையும் வாய்ந்த தமிழ்ப்பேரினம், இடையில் வந்து கலந்த ஆரிய இனத்தால் தம் குடிமை இழந்து, தாழ்வுற்று, மருளும் இருளும் நிறைந்த பல மூடப்பழக்க வழக்கங்களை மேற்கொண்டு மேலும் மேலும் தன்மானமிழந்து தாழ்ந்து போதலைக் கண்டு வருந்தி, அவர்களைத் திருத்தும் பொருட்டுத் தம் வாணாள் முழுமையும் ஒவாது உழைக்கும் ஈ.வே. இராமசாமி என்னும் இயற்பெயரியர், தம் செயற்கரிய செய்கையால், பெரியார் என மக்களால் அழைக்கப் பெறுதலைக் கண்டு வாழ்த்திப் பாடியது இது.

முரசு கடிப்பு உண்ட அரசரும் அல்லர் - இவர் குறுந்தடியால் அடிக்கப்பெறும் முரசை உடைய அரசருள் ஒருவரும் அல்லர் கடிப்பு-குறுந்தடி

முரசு கடிப்புண்ணுதல் - முரசு குறுந்தடியால் அடிக்கப் பெறுதல்.

உரை செல் ஆட்சியின்- தம் வாயுரை செல்லுபடியாகி ஆளுமை செய்யும் ஆட்சி. வெறும் வாயுரையே கட்டளையாகி ஆட்சி செய்தல் அரசர்க்கே இயல்வதொன்று ஆயினும், அரசரல்லாத இவருடைய சொல்லும் தமிழக மக்களிடைச் செல்லுபடியாதல் ஒரு நாட்டையாளும் அரசர்க்குரிய பெருமையை இவருக்களித்தது. ஆனால், கருவியும், காவலும், கடிமதிலும், நாடும் உடைய அரசரின் சொற்கள் செல்லுதல் வியப்பன்று : அவை இல்லாத இவரின் சொற்கள் அரசரின் கட்டளைச் சொற்களாக மக்களால் ஏற்கப் பெறுகின்றன எனின் இவர் அரசரினும் ஓங்கிய அதிகாரம் உடையராதல் பற்றியே இவரை அவரின் ஓங்கியர் எனலாயிற்று.

கோன்முறை திறம்புதல் - அரசன் தனக்குற்ற நெறிமுறைகளினின்று மாறுபடுதல்.

குடிநிலை திரிமுன் - அரசன் நெறிபிழைத்தலை யொட்டிக் குடிகளும் நிலை திரிவார்களாகையின், அதற்குமுன் என்றபடி

ஆன்றுரை - அறிதலால் அமைந்த உரை.

கொளுவும் - உணர உரைக்கும், செலச் சொல்லும்.

அரசன் நெறிதவறின் குடிகளும் தவறுவர் என முந்துணர்ந்து, அவன் அங்ஙன் தவறாதவாறு உணர வுரைக்கும் அமைச்சரும் அல்லர் இவர்.

நவைதீர் குற்றந் தீர்ந்த - அறியாமை நீங்கிய

அவையின் - அறியாமை நீங்கிய அமைச்சரவையினும்

நலங்கூர் நாவினர் - அரசினதும், குடியினதும் நலன்களையே மிகுத்து நாடும் நாவினை உடையவர்.