பக்கம்:நூறாசிரியம்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

123

நீக்கி, அவன் அறிவாற்றலறிந்து அவன் பண்பைப் போற்றியுரைத்தது இக்கூற்று.

“வெண்மைத் தன்மையும் மணமும் கொண்ட முல்லை மலர்களை உடைய கொடி, கைப்புச்சுவை நிரம்பிய பால் ஊறுகின்றதும், கொழுவிய தோற்றமுடையதுமான கள்ளிச் செடியின் மீது இவர்ந்து படர்ந்தாலும், கருமைத் தன்மையும் நறுமணமும் கொண்ட இலைகளையும் கரிய கால்களையும் உடைய நொச்சிச் செடியினைத் தழுவி நின்றாலும் , அரம் போலும் ஒரத்தரும்புடையதும் வெப்பு நிறைந்ததும் ஆகிய வேப்பமரத்தின் மலர் முகைகளை அளாவி நின்றாலும், தன் வெண்மையினும் மனத்தினும் மாறுபடாது பூத்தல் தொழில் செய்வது போல், பழக்க வொழுக்கங்கள் மாறுபடும் பல தேயங்கட்குச் செல்லினும் என் தலைவன் தனக்குற்ற இயல்பான பண்பொழுக்கினின்று மாறுபடும் தன்மையோன் அல்லன்” - என்று அவன்பால் ஐயுற்ற தோழிக்கு அறிவுறுத்தினள் என்க.

ஈண்டு முல்லைக்கொடி அவன் செலவையும், மலர் அவன் உள்ளத்தையும் குறித்தன. கைம்பாற் கள்ளியும், மொய்ம்பிலை மைங்கால் நொச்சியும், அரத்துவாய் வெவ்விலை வேம்பும் பிற தேயங்களின் வேறுபாடுணர்த்த வந்தன. கள்ளியினது கசப்பு நிறைந்த பாலும், நொச்சியின் மணமும் கருமையும், வேம்பின் வெப்பும் ஆங்காங்கு வசதியும் நிறையழி மகளிரது கவர்ச்சியையும் தன்மையையும் உணர்த்த வந்தன என்க.

கைம்பால் கள்ளி - கைப்பு நிறைந்த வெள்ளி பாலையுடைய கள்ளி. ஆவின் பால் போன்ற தோற்றங் காட்டினும் கள்ளிப்பால் சுவைப்பின் கசப்பும் உண்ணின் உயிர்ப்போக்குந் தன்மை உடையது போல், பார்த்தற்கு நிறையுடையவர் போல் தெரியினும் பொது மகளிர் புழக்கத்திற் கசப்பும், தன்மையில் உயிர்க்கு ஊறும் கொண்டவராவர் என்றாள் என்க. தன் தலைவன் பொருட்களின் தோற்றம் மட்டுமன்றி மெய்ப்பொருளும் தேர வல்லவன் என்று கூறினாள் என்க.

இவர்தல் - ஏறிப்படர்தல்

ஈண்டு கள்ளி - பிரிவாகிய பாலைக்கு உரிப்பொருளாகி நின்றது.

‘நிலத்தூன்றிய முல்லை, அதனின்றெழுந்து ஏறி, நிலத்தைப் பிரிந்து பாலைத்திணைக்குரியதாகிய கள்ளியின் மேல்படரினும்' என்று பொருள் கொள்க.

மொய்ம்பிலை மைங்கால் நொச்சி-மொய்த்தடர்ந்த இலைகளையுடையதும் கரிய கால்களையுடையதுமான நொச்சிச் செடி

நொச்சி மணமுடையது போல் தோன்றினும் நோயுடையார் நாடிப் போவதொன்றாகலின் அதன் தன்மையினையும் வரைவின் மகளிர்க்கு உவமை கூறினள்.நிறையழி பெண்டிர் நிறைந்த நிலத்து, உறைவோனாயினும் உளத்தின் வெண்மையும் மணமும் விலக்கோனல்லன் என்பது தலைவியின் உறுதி.