பக்கம்:நூறாசிரியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

133

28 செம்பொன் மாணிழை


செம்பொன் மாணிழை விம்மத் தாங்கி
மும்முறை வணங்கி யெழுந்தனை யன்றே!
அற்றை நன்னாள் நினைவுகொளக் கூர்மதி!
ஒற்றைத் தனியை அல்லை;நின் அழுங்கல்
கொளல்சிறிது மின்றிநின் இளமகன், கொழுஞ்சுவை (5)
வழுக்கை யுறிஞ்சிய முக்கட் கூந்தை
கழைநுதி பொருத்தி யுருள்கொடு வலந்தர
நீநின் செவித்துளை தாழக் குழைவாங்கி
நெய்சுவறிக் குழல்பறம்ப
மெய்பசந்து களையிழப்ப
உகுநீர் விழியோ டுள்ளங் கவலுதல் (10)
தகுவதில் அம்ம! நின்கடை வாயில்
புகுவது முண்டே, அவட்புளித்த ஞான்றே!

பொழிப்பு:

செவ்விய பொன்னால் செய்யப் பெற்றதும் பெருமை மிக்கதும் ஆகிய அணியை, நின் உள்ளம் பெருமிதத்தால் விம்மும்படி உன் தலைதாழத் தாங்கி, அவனையும் அவன் பெற்றோரையும் நின் பெற்றோரையும் முறையாக அடிதொட்டு வணங்கி எழுந்தனை அல்லையோ? அந்த மன்றல் நன்னாளை நினைவிற் கொள்வாயாக இன்று நீ ஒன்றியாய் விடப்பட்ட தனியை அல்லை; நின்னுடை வருத்தத்தைச் சிறிதும் உணர்ந்து கொள்ளவின்றி, நின் இளமகன், கொழுவிய துங்கின் வழுக்கையை யுறிஞ்சி அம்மூன்று கண்களையுடைய பனங்காயை மூங்கிலின் நுனியில் பொருத்திக் கொண்டு, நின் வாயிலை வலம் வருகின்றான். நீயோ, செவியின் துளை தாழும்படி அதன் குழைகளைக் களைந்து நீக்கி, நெய் சுவறிக் காய்ந்த தின் கூந்தல் காற்றில் பறந்து அலையுமாறு, மேனி பசப்புறக் களையிழந்து உகுக்கின்ற நீரையுடைய விழியோடு உள்ளங் கவலுறுதல் தக்கதில்லை அம்ம. அப்பரத்தை வாயிற்பட்ட நின் தலைவன் இனித்துக் கிடக்கும் அவள் தொடர்பு புளித்துப் போகும் பொழுதில் நின் இற்புற வாயில் வழிப்புகுந்து நின்னைப் போற்றுங் காலம் வரும்; அதுவரை அமைந்திருப்பாயாகுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/159&oldid=1223753" இலிருந்து மீள்விக்கப்பட்டது