பக்கம்:நூறாசிரியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

நூறாசிரியம்


விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தன்னை மணந்த கணவன் பரத்தை ஒருத்தியை நாடி நின்றதால் களையிழந்த ஒருத்தியை, அவன் வரவு விரைவில் வருமென்று தேற்றியும், அதுவரை அமைந்திருக்க வேண்டி ஆற்றியதாகும் இப்பாட்டு.

இல்லற வொழுக்கம் திசைந்து மாறிய ஒருவன், தான் விரும்பிய பரத்தையின் தொடர்பு இனியதன்று; இன்னாதது என்று தானே அறியும் வரை அவனைத் திசை திருப்புதல் யாவர்க்கும் இயலாத தொன்றாகலினாலும், அவ்வாறு அவன் அறிந்து கொள்ளுதலும் விரைந்து நடைபெறும் ஆகலினாலும், 'நீ வருந்தற்க; நின் அமைவே சிறந்தது' எனத் தலைவியைத் தோழி ஒருத்தி தேற்றி அவள் துயரை ஆற்றினாள் என்க.

‘மணந்து கொண்டவள் நீயே! நின் பெற்றோரும் அவன் பெற்றோரும் அவனும் மகிழுமாறு ஒப்பி ஏற்றுக் கொள்ளப் பெற்றவள் நீயே! நீ இல்லற வாழ்க்கைக்குத் தக்கவள் என்பதை நினக்குற்ற மகப் பேற்றால் மெய்ப்பித்தனை. இந்நிலையில் அவன் நின்னைத் துறந்து பிறளொருத்தியை நாடுதல் அறமுமன்று; பண்புமன்று. ஆயினும் புறமயக்கம் ஒன்றே கருதி அவனை நாடிய அவன் உள்ளம் விரைவில் அவளின் கைப்புச் சுவையை உணர்வது கட்டாயம் நிகழும்; அதுவரை நீ ஆற்றியிரு’ - என்று தோழி அறிவுறுத்தினாள் என்க.

செம்பொன் மாணிழை - செவ்விய பொன்னால் ஆகிய பெருமை மிக்க அணி, மாண் இழை இழைத்துச் செய்தலால் அணி இழை எனப் பெற்றது.

பெண் ஒருத்தி அணிகின்ற அணிகள் யாவற்றிலும் அவள் மணவினைப் போதணியும் மங்கல அணியே அவளுக்குப் பெருமை தரும் அணியாகலின் அது மாணிழை எனப் பெற்றது.

இதனை முற்சுட்டிக் கூறியது 'நினக்கே அவன் உரியன்’ என்பதை நினைவு கூர்தற்கென்க.

விம்மத் தாங்கி - நின் உள்ளம் பெருமிதத்தால் விம்மும் படி, நீ அதைக் குனிந்து ஏற்று.

அன்று நின் மங்கல வணியை இன்பத்தால் நெஞ்சு விம்மும்படி தாங்கிக் கொண்டனை. இன்றோ நீதுன்பத்தால் நெஞ்சு விம்மிப் பொருமும் படி துயரத்தை தாங்கிக் கொள் என்றபடி

மும்முறை வணங்கி எழுந்தனை அன்றே! - அவனையும் அவனைப் பெற்றாரையும், நின்னைப் பெற்றாரையும் அந்த மணநாளில் நீ வணங்கி எழுந்தனை அல்லையோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/160&oldid=1220849" இலிருந்து மீள்விக்கப்பட்டது