பக்கம்:நூறாசிரியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29 பனங்கனிப் பறட்டை பையல்


கூழினும் புளித்தோ உப்பினும் உவர்த்தோ
காழ்த்த சுள்ளிக் காயினுங் கார்த்தோ
கரும்புகை முருட்டின் மழைநீ ரொழுக
இருட்படை புகுந்தநம் இல்லினும் மைத்தோ
பனங்கணிப் பறட்டைப் பையல் சிணுங்க 5
நனைவிழி கலுழும் மனைநின் மேனி
வறளினுந் தேய்வினும் பாழ்த்தோ
மறலியின் குறிக்கை மாட்டுநற் சாவே!


பொழிப்பு:

நாம் அருந்தும் கூழை விடப் புளித்ததோ? அதற்கிடும் உப்பை விட உவர்த்ததோ? அக்கூழை யருந்துகையில் நாம் இடையிடையே கடித்துக் கொள்ளும் விதைமுற்றிய மிளகாயினும் கார்ப்பு உடையதோ? பச்சைச் சுள்ளிகளையும் காட்டுச் சருகுகளையும் போட்டுக் கொளுத்துதலால் எழுகின்ற கரும் புகைசூழ்ந்து கருமையேறியதும், முருடு நிறைந்ததும், மழை நீர் ஒழுக்கு உடையதும், இருள் தன் படையுடன் வந்து புகுந்து கொண்டதுமாகிய நம் வீட்டை விடக் கருமை நிறைந்ததோ ? பனம்பழத்தினைச் சூப்பியெறிந்தது போலும், பறட்டைத் தலையுடன் விளங்கும் நம் பையன் பசிக்காக நின்பால் சிணுங்கியழ, நனைந்த விழிகள் வடிக்கின்ற நீரையுடைய மனைவியே நின் மேனியின் வறட்சியையும் தேய்வையும் விடக் கொடுமையானதோ, உயிரைப் பிரிக்கும் கொடியவனின் குறி தப்பாத கை நம்மைப் பற்றியிழுக்கின்ற சாவு?

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

வறுமையால் துன்புற்ற ஒருவன் தன் மனைவியிடம் தம்மை வருத்துகின்ற துயரங்களைவிட உயிரை உடலினின்று பிரிக்கின்ற சாவு கொடுமையானதன்று என வெம்பிக் கூறியதாகும் இப்பாட்டு.

'நாம் அருந்துகின்ற கூழோ மிகப் பழையது; கடுமையான புளிப்பு வாய்ந்தது. அதனை விடவோ சாவு புளிப்புடையதாகவிருக்கும்? இருக்கவே இருக்காது’ என்றும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/165&oldid=1221016" இலிருந்து மீள்விக்கப்பட்டது