பக்கம்:நூறாசிரியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

நூறாசிரியம்

வெப்பக் கூறுபாடுகளையும், கால இடவேறுபாடுகளையும் பயிரியல் அறிஞர் ஒருவரைப் போல் உணர்ந்துரைத்தல் முடியுமோ இவ்வாறு ஒரு பொருளைப் பற்றிய அறிவுக்கு எத்தனைப் படி நிலைகள் உண்டோ, அத்தனைப் படிநிலைகளும் அறியாமைக்கும் உரியனவாம் என்க. என்னை? பிந்தினவரின் முந்தினவர் படிப்படியாக அறியாமை மிக்கவராகத்தாமே கருதப்பெறுவர். முந்தினவரின் பிந்தினவர் படிப்படியாக அறிவுமிக்கவராகத் தாமே கருதப் பெறுவர்.

எனவே, அறியாமையை அறியாதது ஒர் அறியாமை ; அதனை ஒரளவு அறிந்த பின்னும் ஒர் அறியாமை அறியாமையை அறியாமல் இருப்பவனை விட, அதனை அறிந்தவன் ஒரளவுமேல் என்றாலும் முழுநிலையைப் பொறுத்த அளவில் அவனும் அறியாதவனே. ஆகவே, இறைப்பொருள் அறியப்படாதது என்றால், ‘அறியப்படாத ஒன்று உமக்கு மட்டும் அறியப்பட்டது யாங்கன்?” என்னும் கேள்விக்குப் பொருளே இல்லாமல் போகிறது. அறியப்படாதது இறைமையின் தன்மையே யன்றி இறைமையின் உண்மை யன்று.

தாயின் கருப்பையுள் கிடந்தோம் என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். அதன் தன்மையை நாம் அறிவோமா ? இனி, தன்மையறியப்படாததால் அதன் உண்மையும் பொய்யாகுமோ? இனி உண்மை உணரப்பெற்றதால், அதன் தன்மையும் உணரப்பெறுவதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இப்பொழுதுள்ள அறிவியல் இன்னும் நூறு பங்கு வளர்ந்தாலும், நாம் கருப்பையுள் கிடந்த பொழுதிருந்த நிலையை இக்கால் நமக்குப் புலப்படுத்திக்காட்டுதல் இயலாது. ஏனெனில் கருப்பையுள் நம் உடலுறுப்புகள் இருந்த நிலையிலேயே நம் அறிவுணர்வும் இருந்திருக்கும். அந்த நிலையை அறிவுணர்வு மிகுந்த நமக்கு உணர்த்துவது யாங்கன்? அப்படி உணர்வதுங்கூட இல்லாத நிலைதானே அது. கல்லுக்குக் கல்போல் கிடக்குந் தன்மையை உணர்த்துவது யார்?

எனவே, நம் அறிவின் எல்லை இறைவனைப் பற்றிய அறியாமையின் தொடக்கமாக அமைவதைக் கண்டு தெளிக. அவ்வறியாமை நிலை நம்மால் அறியப்பெறும் பொழுது, நமக்குள்ள புலன் உறுப்புகள், மூளைத்திறன்கள் யாவும் செயலற்றுப் போகும். இனி, இவ்வுலகின்கண் இருந்துகொண்டே இறைமைத் தோற்றத்தை அறிந்தவராகச் சமயக்குரவர் சிலர் எல்லாச் சமயத்தும் கூறியிருக்கின்ற தென்னை யெனின், அதைப் பற்றியும் சிறிது விளக்குவோம்.

அறிவு நிலையும் அறியாமை நிலையும் பலபடி நிலைகளையுடையன என்பது பற்றி முன்னரே அறிவோம். அறிவு நிலையில் உள்ள ஒருவர் அறியாமை நிலையில் உள்ள ஒருவர்க்குத் தாமே தம் அறிவு நிலையைப் புலப்படுத்திக் காட்டினாலொழிய அவ்வறியாமை நிலையில் உள்ளவர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/175&oldid=1220653" இலிருந்து மீள்விக்கப்பட்டது