பக்கம்:நூறாசிரியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

150



அவ்வறிவு நிலை புலப்படாதாம் என்பதையும் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆகவே இறைப்பேரறிவு தானே மாந்த உயிரொன்றிற்குத் தன்னை விளக்கிக் காட்டவேண்டும் என்று கருத்துக்கொண்டு காட்டினால் ஒழிய, அது தன்னை அறிந்து கொள்ளல் எவர்க்கும் இயலாது. இனி அப்பேரறிவும், அறியாமையே மிக்குள்ள ஒரு மாந்த உயிர்க்கு, அது தன்னை எந்த அளவில் விளங்கிக் கொள்ள வியலுமோ அந்த அளவறிந்துதான் தன்னைப் புலப்படுத்திக் காட்டுமேயன்றித் தன்னை முற்றும் அவ்வுயிர்க்கு விளக்கிக் காட்டவும் செய்யாது. இனி, ஓர் எறும்போ ஒரு புழுவோ எவ்வளவுதான் தன் நிலையில் முன்னேறினாலும் நம்போலும் ஒரு மாந்த உயிரை அறிய விரும்பும் ஒரு நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள முடியாது. அவ்வாறே உயர்த்திக் கொண்டாலும் அவ்வெறும்பின் மீமிசை அறிவுக்குப் புரியாத நிலையில் நாம் நம்மை விளக்கிவிட மாட்டோம். ஒர் அரையாண்டுக் குழந்தை ‘தான் இவ்வுலகத்திற்கு வந்தது எப்படி’ என்று நம்மைக் கேளாது. ஏனெனில் அவ்வாறு கேட்கவும் ஓர் அறிவு நிலை வேண்டும். ஒரு கால், அத்தகைய அறிவு வளர்ந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நிரம்பப்பெற்ற குழந்தை அந்தக் கேள்வியைக் கேட்பினும் அக்குழந்தை அக்கேள்விக்கான விடையை எந்த அளவில் விளக்கிக் கொள்ள வியலுமோ, அந்த நிலையில்தான் நாம் அதற்கு விளக்குவோமேயன்றி, நமக்கு அத்துறையில் விளங்கிய அனைத்தையும் விளக்கிவிட மாட்டோம். அவ்வாறு விளக்கினாலும் அக்குழந்தைக்கு ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு வகை அறியாமை வந்து இடை மறிக்கும்.

இறைமை நிலைக்கு நாம் சிற்றெறும்பினும் பல்லாயிரங் கோடி அளவில் எல்லா நிலையிலும் தாழ்ச்சியுற்றவர்கள். அளப்பதற்கரியதாய் விரிந்து கொண்டே போகின்ற இப்பேரரும் புடவியுள் கணக்கற்றுத் தாறுமாறாக ஒடிக்கொண்டிருக்கும் பேரண்டங்களையும் சிற்றண்டங்களையும் நம் உலகம் போல் உயிர்கள் சான்ற பல்லாயிரங்கோடி உலகங்களையும் தம்முள் ஒடுக்கிக் கொண்டு கிடக்கும் இறைப்பேராற்றல் எங்கே? குற்றுயிரும் குறுவினையும் கொண்டு மிக மிகக் குறுங்காலத்தில் வாழ்ந்து மடியும் நாம் எங்கே? நமக்கு அப் பேரிறைப்பொருள் தன்னைப் புலப்படுத்திக் காட்டுதல் எங்கே? அது தன்னைக் காட்டினாலும் நாம் அதனை அறிந்து கொள்ளுதல் எங்ஙன்? (இது பற்றி இன்னும் தெளிவாக உணர்ந்து கொள்ள இறைக்காட்சி என்னும் என் கற்பனை ஊற்றுக் கட்டுரையைக் காண்க)

இனி, அச்சமயக் குரவர்கள் தாம் இறைவனைக் கண்டதாக உரைத்த நிலைகள் பொய்யாகுமே எனில், ஆகாது. அந்நிலைகள் அப்பெரியார்களின் மனக்கற்பிதங்களே! அஃதாவது அவர்கள் இறைப் பேராற்றலை எவ்வகையில் கற்பித்துக் கொண்டு பார்க்க விழைந்தனரோ, அவ்வகையில் கண்ட ஒரு கற்பிதத் தோற்றமே அக் காட்சி என்கர் என்னை, ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/176&oldid=1220655" இலிருந்து மீள்விக்கப்பட்டது