பக்கம்:நூறாசிரியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

நூறாசிரியம்

சமயக்குரவரும் இறைப் பேராற்றலை அவரவர் விரும்பிய வடிவிலேயே கண்டுள்ளதாகக் கூறியுள்ளனரேயன்றி, எல்லார்க்கும் ஒரு வடிவே காட்சியுட் பட்டது என்பது எங்கும் புலப்படுத்தப் பெறவில்லை. எனவே அவர்கள் தம் அறிவுக்கொப்ப அவர்கள் கண்டவை ஒரு வகைக் கனவு நிலைப்பட்ட கற்பிதக் காட்சிகளேயாம் என்று தெற்றெனத் தெளிந்து கொள்க. அக்கர்ட்சிகள் முன்னிய மெய்யுணர்வுடைய உங்கட்கும் எமக்கும் கூட வரும். இனி, அக்காட்சிகள் போன்றனவே இவ்வுலகத் தோற்றங்களும், வானின்று கொட்டும் அருவியின் பேருருவமும், நிலவுலகையே பிளப்பது போல் இடிக்கும் பேரிடியின் பேரோசையும் அத்தகைய உணர்வு நிலைகளையே உருவாக்குகின்றன. அவற்றைக் கொண்டுதாம் நாம் இறைமையுணர்வு எய்திப் பல்வகை உருவ வழிபாடுகளைப் படைத்துக் கொண்டோம். ஆனால் அந்த நிலைகள் யாவும் இறைப் பேராற்றலின் இருக்கை நிலை யாகா.

இவற்றை உணர்த்தி நிற்பது தான் இப்பாடலின் ‘எவன் கொல் அறிகும் இறையவன் கிடக்கை’ என்னும் முதல் வரியாகும்.

கிடக்கை என்பது புறக்கிடக்கையை உணர்த்துதல் போலவே அகக்கிடக்கையையும் உணர்த்தும்.

புறக்கிடக்கை இருப்புநிலையையும், அகக்கிடக்கை விருப்பு நிலையையும் உணர்த்தும் உணர்த்தவே, இறைவனின் இருப்பு நிலையை யாவர் அறிவர் என்பதாகவும், அவன் விருப்பத்தை அறிவர் யாவர் என்பதாகவும் பொருள் கொள்க

இனி, அடுத்துவரும் அடிகள் முதலடி முதற் சொல்லாகிய ‘அவன்’ என்பதற்குப் பரியாய பொருள் விளக்கமாக வருவனவாம். என்னை? எவன் அறிகும் இறையவன் கிடக்கை எனும் கூற்றின்கண் உள்ள ‘எவன்’ என்னும் வினாவுள் மாந்தவினத்துள்ள யாவரும் அடங்குவரோ எனின், அடங்குவர் என்க.

இனி, அவருள்ளும் இயக்கம், அதன் மேலெழுந்த வினை , அதன் கருவாய நசை, அதன் பருவாய எடுப்பும் படுப்பும் சான்ற வலிமையும் மெலிமையும், அவை பற்றி நின்ற பொறிகளின் முனைப்பும் என இவ்வனைத்து நிலைகளானும் சிறந்து விளங்கும் நுண்ணுணர்வினோரே மேல் வரையினராக ஈண்டுக் குறிக்கப் பெற்றார் என்க. பெறவே, அவர்க்குரித்தாகிய வினையும் நசையும் பொறியும் முனைப்பும் அறிவும் தெளிவும் முறையே விளக்கப்பெறும்.

விசைப்பே கவண்முகத்து உருவிய சிறுகல் போல அளவிடைப்பொழுதே - கவண் முகத்து வைக்கப்பெற்ற சிறுகல்லின் இயக்கம் உருவியதும் ஓடியதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/177&oldid=1220658" இலிருந்து மீள்விக்கப்பட்டது