பக்கம்:நூறாசிரியம்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

173


ஒவ்வொரு நாளிரவிலும் தலைவி தலைவனின் வரவு நேராதோ என்று எதிர்பார்த்துக் கிடக்கின்றாள். ஒவ்வோர் இரவும் அவன் வந்து விடுவான் என்றே எண்ணுகின்றாள். ஆனால் அந்தக் குறிப்பிட்ட இரவில் தனித்த ஒரு நாய் வேறு தொடர்ந்து குரைத்துக் கொண்டுள்ளது. ஒருவேளை, முன்னறிவிப்பின்றித் தன் தலைவன் அன்று வர நேர்ந்தால், அருமையாக நேரும் அவனின் இனிய வருகையையும், அந்த நாய் அவன் மேற்பாய்ந்து தடுத்துவிட்டால் என்செய்வது என்னும் கவலையால் அலமருகின்றாள் தலைவி.

துணையுடன் உள்ள நாயாகவன்றித் தனித்த நாயாகவுள்ளதால் மேலே பாயலாம் என்று அஞ்சுகின்றாள். அவ்வாறு அஞ்சி எழலும் விழலுமாக விருக்கின்றாள்.

எழிலும் விழலும் ஆகி- (எதிர்பாராமல் நேருகின்ற தன் தலைவனின் இனிய வரவைத் தொடர்ந்து குரைக்கின்ற அந்த நாய் அவன் மேல் பாய்ந்து தடுத்துவிடுமோ என்று அஞ்சியவள்) படுக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடிப் பார்ப்பதும், பின் சோர்வுற்று உள்ளே வந்து மீண்டும் படுக்கையில் விழுவதுமாக இருக்கின்றாள் என்க.

எழலும் விழலும் - விரைவுக் குறிப்புடன் கூடிய சொற்கள். எழுதல் விழுதல் இயல்புக் குறிப்பான சொற்கள்.

உழலும் மெய்யோடு - இயங்குகின்ற உடம்புடன்.

தலைவியை உயிரற்ற உடம்பு என்றாள். அவள் உயிர் தலைவனோடு உறைவதால் இங்குள்ளது வெற்றுடம்பே என்றாள். ஆனால் உயிரின்றி இவ்வுடம்பு இயங்குவதால், இயங்குகின்ற உடம்பு என்றாள் என்க! உணர்வின்றி இயக்கிவிட்ட பாவைபோல் தலைவி நடமாடினாள் என்க. மேலும் உடம்பு என்றதால், தலைவனை உயிரென்றும் உணர்த்தி, அவ்வுடம்பொடு வந்து பொருந்துக என்றும் கூறினாள் என்க.

ஒருத்தி ஈங்கு உண்டு - உனக்கென ஒருத்தி இங்கு உள்ளாள் என அறிக. உனக்குரியவளான ஒருத்தியென்றமையால், உரிமையற்ற பிறரை ஒரு வேளை எண்ணிக்கொண்டு நீ வராமற் காலம் கடத்தியிராதே. நின் தலைவி உயிரற்ற உடலாக இங்கு இயங்குகின்றாள். அவளுக்கு நீதான் உயிர். எனவே நீ அவனை நினைத்து உடனே வரவு கொள் என்னும் குறிப்புணர்த்தினாள் என்க.

ஒதற் பொருட்டு வேற்றுார் சென்று வதியும் தலைவற்குத் தோழி நேரில் சென்று உணர்த்தல் இயலாதாகையின் மடல்வழிப் போக்கினாள் என்க.இனி, தோழி கூற்றாக வன்றித்தலைவி கூற்றாகப் பொருள் கொளினும் இஃது இயலும் என்க

இது, முல்லைத் திணையும் பிரிவிடை யழுங்கல் என்னும் துறையும் ஆகும்.