பக்கம்:நூறாசிரியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

188

'அருள்கின்ற கை என்பொருட்டு அருளாத தென்னையோ?' என்று ஏக்கமும் எரியும் தோன்றக் குறித்தாள் என்க.

பெண் ஒருத்திக்குக் கை அருளுதல் அணைத்தல் ஆம்

மயர்வு அற -வேற்றுமை அற்றவாறு, உருவ அமைப்புக்கு மாறுபடாதபடி

பொலிந்த - அழகுற விளங்கிய,

மல்லல் மேனி - வளப்பம் வலிமையும் உடைய உடல்,

‘உடல்’ என்னாது மேனி என்றது உயிருள்ள உடலாகையான், உயிர்மேன் நின்றது மேனி. இனி, மேனி என்பது சிறப்பாக உடலின் மேற் பொலிவையும் குறிக்கும்.

உயிர்கொல் நெஞ்சம் - உயிரைக் கொல்லுகின்ற நெஞ்சம். தன் காதலை ஏற்காத நெஞ்சு, தன் உயிரைக் கொன்று உடலைப் பிணமாக்கும் நெஞ்சாதலின் உயிர் கொல் நெஞ்சு என்றாள்.

எவன் குடி கொண்டதே - எவ்வாறு குடிகொண்டதோ அறிகிலேனே என்றபடி

இத்துணை அழகிய உடல் நலம் வாய்த்தவனுக்கு என்னை விரும்பும் நெஞ்சு வாய்க்கவில்லையே என்று ஏங்கினாள் என்க.

“உடலழகுக் கேற்றவாறு உள்ளழகு வாயாத நெஞ்சம் ஆகலின், அதனை அவன் விரும்பிக் குடிவைத்துக் கொண்டதாக இருத்தல் இயலாது. அதுதானே வந்து குடியேறி இருத்தல் வேண்டும்" என்னும் கருத்துத் தோன்றக் குடி கொண்டது என்றாள் என்க.

எவன்:- என்னுஞ் சொல் எங்கிருந்து என்று இடப்பொருள் தோன்றவும் பொருள்படும்.

பெண்மை நயக்கும் ஆண்மைச் சிறப்பைக் குறித்ததாகும் இப்பாடல்.

இது, பாடாண் திணையும், பெருந்திணை என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/214&oldid=1208970" இலிருந்து மீள்விக்கப்பட்டது