பக்கம்:நூறாசிரியம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

190

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.

புறத்தே நெருங்கி நின்று சுவையான சொற்களைப் பேசி, அகத்தே பொருந்தாத நட்பு செய்து, காலத்தே முகமும் பொருந்தாமல் விலகியிருக்கும் கீழ்மை நெஞ்சினார் தம் தொடர்பால் நோவுற்ற ஒருவன் நெஞ்சின் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு உள்ளத்தினளவாக வெளிப் போந்த இயல்பான உணர்வுடன் நட்புச் செய்யும் கசடு நீங்கிய உயர்ந்த அறிவினார் தம் இணைவுக்குப் பொருந்தத் துடிக்கும் தன் நன்னெஞ்சிற்கு “அவ்வாறு அருமை வாய்ந்தோரைத் தேடிப்போகும் முயற்சியில் எத்துணைக் காலமும் இடமும் கடப்பதற்கு நீ அஞ்சாதே ஊக்கமுடன் மேன்மேற் செல்” என்று கட்டளை யிடுவதாக அமைந்ததிப் பாட்டு.

தொடக்கக் காலத்தே மிகவும் சுவைபடப் பேசிப் பழகியிருக்கும் கீழ்மை நெஞ்சினார், காலத்தே தம் தன்மையில் மாறிப்போதற்கு, புதியதில் மிகுசுவையும், நலனும் அளிக்கும் தேங்காய்ப் பால் மிக விரைந்து புளித்தும், தீதாகவும் போகும் தன்மையும், இணையும் புதுத் தொடர்பில் இனியராயிருந்து, காலம் கழியக் கழிய மேலும் நலமும் சுவையும் வாய்ந்தோராய் விளங்கும் தூயமனமும், அறிவுநலமும் வாய்ந்தார் நட்புக்கு, தொடக்கத்தில் நறுஞ்சுவை பயப்பதுவாக விருப்பத் தோடமையாது, எவ்வளவு காலஞ் செல்லினும் சுவையினும் நலத்தினும் மேன்மேலும் மிகுவதல்லது மாறுபாடும் வேறுபாடும் உறாத தேனின் தன்மையும் உவமைகளாகக் கூறப்பெற்றன.

குடுமித் தேங்காய் - குடுமிவிட்டு உரித்த தேங்காய், விட்ட குடுமியைச் சிறப்பித்தலால், உரித்த கால முதிர்ச்சி தெரிவிக்கப் பெற்றது. மட்டை உரிக்கப் பெற்று, நன்கு உலர்ந்து முற்றிப் பால் பிழியும் பக்குவம் பெற்ற தேங்காய் என்க.

துருவிப்பிழிதல் - தேங்காயைப் பூத்துருவிப் பிழிந்து பாலெடுத்தல்.

கடும்பால் ... ஆவின் ஈன்றனிமைப் பால், சீம்பால், கடும்பால் . தீம்பால் சீம்பாலை விடச் சுவையும் நலமும் தருகின்ற தேங்காய்ப்பால்,

முதிர முதிர (பிழியப்பெற்ற பால்) காலமுதிர்ச்சி தோன்றத் தோன்.

முகங்கெடப் புளிக்கும்:-வாயால் பருகுதற்கு அருகில் சென்ற முகம் தன் தன்மையிற் கெடும்படி புளிப்பும், நெடியும் வீசும்.

துதைசொல் பூரியர் - மிக நெருக்கமாகி நின்று உரைக்கும் சொற்களையுடைய கீழ்மைக் குணமுடையவர். பூரித்தல் மிகுதல் பூரியர் உலகியல் உணர்வான் மிகுந்து தோன்றும் பொதுக் குணமாந்தர்.

தோன்றா நட்பு .- தோன்ற வேண்டாத நட்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/216&oldid=1208988" இலிருந்து மீள்விக்கப்பட்டது