பக்கம்:நூறாசிரியம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44 பொய்வழங் கிலனே !

எள்ளாடு செக்கர் நெய்கழி ஈமென்று
உள்ளத் துவப்பின் ஒங்குதியில் எருத்தம்
ஒய்யென் னோசைக்கு உறங்கியாங் குலவரும்
செய்யூர்க் கொண்டல் மெய்யிலா னெனினும்
பொய்வழங் கிலனே தோழி தொய்குழல் 5
நெய்வீப் பெய்யும் நாளுமொன் றுண்டே!

பொழிப்புரை:

எள்ளைச் செக்கிலிட்டு ஆட்டுகின்ற செக்கர், இறுதியில் எள்ளில் உள்ள நெய்யைப் பிழிந்து கொண்டு, அது கழிந்த கழிவாகிய பிண்ணாக்கைத் தனக்குத் தருவர் என்னும் உள்ள உவப்புடன், ஒங்கிய திமிலையுடைய எருது, செக்கு ஆடுதலால் தோன்றிய ஒய்யென்னும் ஓசையைக் கேட்டவாறு உறக்கம் கொண்டு சுழன்று வரும் தன்மையுடைய, வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தலைவன், எனக்கு மெய்யாக நடக்கிலான் எனினும் பொய் கூறும் தன்மையன் அல்லன், தோழி, அவிழ்ந்து தொய்ந்து கிடக்கும் என் கூந்தல் நெய்யும் பூவும் செரிந்து கொள்ளும் நாளும் ஒன்று உண்டு.

விரிப்பு :

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது. 'நெய்யும் பூவும் இல்லாமல் நின் கூந்தல் இவ்வாறு அவிழ்ந்து பாரிக்கிடத்தல் என்ன' என்று வினாவிய தோழிக்குத் தலைவி இது கூறினாள் என்க.

எள்ளைச் செக்கிலிட்டு ஆட்டுகின்ற மருத நிலத்தைச் சார்ந்தவன் என் தலைவன். அவன் ஊர் வயல்கள் நிறைந்த செய்யூர். எனவே அவன் கொண்டல் என்னும் பெயர் பெற்றான். அவன் இக்கால் என்னைத் துறந்து, என் நலமும் இழந்து, அயற் பெண்ணொருத்தியின் மயல் மேற்கொண்டு புறவொழுக்கம் கொண்டான். அவனின் பொருள் தீரும் வரை காதல் காட்டி, அவனை அவள் கை நெகிழ்க்கும் நாள் ஒன்று வரும். அக்கால் அவன் என்னை நாடி வருவான். அது போழ்து யானும் நெய் சொரிந்து தலைவாரிப் பூச்சூடி மகிழ்வேன் என்று தலைவி விடையாகக் கூறியது இப்பாட்டு

தலைவி குறிப்பாகக் கூறும் விடையில் அவள் தனிமைத்துயரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/230&oldid=1209041" இலிருந்து மீள்விக்கப்பட்டது