பக்கம்:நூறாசிரியம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

206

இனி, எள்ளாடு செக்கர் என்றவழி, எள்ளை ஆட்டிப்பிழிந்து கொள்வது போல், தலைவனைக் காதல் உணர்வினால் ஆட்டிப் பொருளைப் பிழிந்து கொள்ளும் அயலாளது உளநிலையும், நெய்கழி ஈயுமென்றதால், தலைவனது பொருளாகிய சாற்றைப் பிழிந்து கொண்டு எஞ்சியுள்ள சக்கைபோல் தலைவனை மட்டில் தனக்கவள் தருவாள் என்னும் எதிர்பார்ப்பும், பொருள் நீங்கிய பின்னேனும் அவன் தனக்குக் கிடைப்பான் என்னும் தலைவியது உள்ள உவப்பும், ஓங்கு திமில் எருத்தம் என்றதால் பெருமை சான்ற அவள் கற்பும், ஒய்யென் ஓசைக்கு உறங்கியாங்கு உலவரும் என்றதால் ஊரார் அவனை உரைத்த பழிகேட்டவாறு, இயக்க மற்றவளாய் அவள் இல்லிருந்து உலவுவதும் புலப்பட்டன என்க.

எள்ளை ஆட்டி எண்ணெயைப் பிழிந்து கொள்ளும் செக்கர் போலும், தலைவனது புறவொழுக்கக் காதலி, தலைவனைக் காதலுணர்வால் ஆட்டி அவன் கைப்பொருளைப் பறித்துக் கொள்வாள். ஆயினும், அவ்வெண்ணெயைப் பிழிந்து கொள்ளும் செக்கர் எஞ்சிய நெய்கழியையேனும் அவ்வெருதுக்குத் தருவதுபோல், அக்காதலியும் தன் தலைவனை வெறுங்கையனாகவேனும் தனக்குத் தருவாள். எனவே அதுவரை அவன் வருவான் என்னும் உள்ள உவகையுடன் செக்கை இழுக்கும் எருது, அது சுற்றப்படுதலால் எழும் “ஒய்" யென்னும் ஓசையைக் கேட்டவாறு, உறங்கிக்கொண்டே சுற்றி வருதல் போல், தானும் அவன் மேல் ஊரார் உரைக்கும் பழிச் சொற்களைக் கேட்டவாறு புறவுணர்வற்றவளாய்ப் புலனொடுக்கத்துடன் இல்லிருந்து வருகிறாள் தலைவி. வயல்கள் நிறைந்த ஊரின் மேகம் போன்ற தலைவன் அவனாகையால், தலைவிக்கு அவன், மழைமேகம்போல் வேண்டிய விடத்து வேண்டிய காலத்துப் பொழியாதவாறும், வேண்டாதவிடத்து அளவின்றிப் பொழியுமாறும், தன்னிடத்து அன்பு மழை பொழியாமல் தன் புறவொழுக்கக் காதலியிடத்துக் காதன் மழை பொழிகின்றான். அவன் தலைவின்ய விட்டு நீங்குகையில் எவ்விடத்துச் செல்கின்றான் என்று கூறாமல் சென்றானாகையால் அவன் மெய்யிலான் ஆகின்றான். ஆனால் அதேவிடத்து 'வருவேன்’ என்று கூறிப் போந்ததால், அவன் வருவான்; ஏனெனில் அவன் பொய் வழங்காதவன். அவன் வரும் வரை அவள் பெருங்கற்பு தோன்ற இல்லிருக்கின்றாள், என்றெல்லாம் பொருள் விளங்கும்படி அவளேன் நெய்யும் பூவும் சொரிந்து தலை புனைந்து கொள்ளவில்லை என்று கேட்ட தோழிக்கு விடை கூறுகின்றாள். தலைவி என்க.

இது முல்லை என் திணையும், புனைந்து கொள் என்ற தோழிக்குத் தலைவன் பொருள் தேடச்சென்றவிடத்துப் பயிலும் புறவொழுக்கத்தால் கவன்று இல்லிருக்கும் தலைவி தன் கற்பு தோன்ற உரைத்தது என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/232&oldid=1209046" இலிருந்து மீள்விக்கப்பட்டது