பக்கம்:நூறாசிரியம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

218

முன்றில் வேங்கை- வீட்டின் முன்புறம் உள்ள வேங்கை மரத்தின்,

முடக்கிளை நரல் - வளைந்த கிளை இன்னொரு கிளையுடன் மோதிக் காற்றில் அசைய எழுகின்ற ஓசை, நரல்-ஓசை,

நரலோடு ஒன்றியழைத்த தானும் அம்முடக் கிளை எழுப்பிய உராய்வு ஒலியுடன் சேர்ந்து, தலைவியை விளித்து அழைத்த ஒரு வழியையும்.

இன்றே - இன்று பகலிலேயே.

துணித்தனர் - அம்மரக் கிளையையும் அதனால், உன் அழைப்புக் குதவிய வழியையும் துண்டித்து விட்டனர்.

இனியே ....... தோளே! - இனிமேலும் நீ தலைவியை முன்போல் தழுவி மகிழ விரும்புவாயின், திருமணம் செய்து கொள்ளும் வழிதான் ஒன்றுண்டு. எனவே, நீ அவளை விரைந்து மணந்து கொள்வாயாக,

இதில் முடக்கிளை என்றதால் அவ்வோசையுடன் நீசேர்ந்து அழைத்து அவளைக் கூடுவது தவறான வழி என்றும், மன்றொன்றுண்டே என்றதால், திருமணம் செய்வது ஒன்றுதான் இனிச் செவ்விய வழி என்றும் சுட்டப் பெற்றன.

இது, குறிஞ்சியென் திணையும் இரவுக் குறிக்கண்வந்து மீண்ட தலைவற்குத் தோழி வரைவு வேண்டியுரைத்தது என்துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/244&oldid=1209064" இலிருந்து மீள்விக்கப்பட்டது