பக்கம்:நூறாசிரியம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



50 யாவர்ப் பாடுகம்


யாவர்ப் பாடுகங் கொல்லோ கழகம்
மூமுறை நிறீஇ முத்தமிழ்ப் புரந்தோர்
அன்றே மாய்ந்தனர் அரசும் பொடிந்த
வென்றியுந் தோற்பு மின்றே யிரப்பார்க்
கொன்று தரலிலர் தரினுமுள் உவந்து 5
நன்றி நினைவிலர் கற்றல் நனியிலர்
உள்ளஞ் செவ்விலர் ஊருயும் பாடிலர்
கள்ளத்து முதலாக் களவூ தியத்துப்
பொய்ம்மை வாணிகப் போலி வாழ்வினர்
மெய்யறு சமயத்துச் சாதி மீட்பிலா 10
வெய்ய புன்குழாம் வீழ்ந்து
செய்யுட் கருவினார் தோன்றுநாள் வரையே!

பொழிப்பு:

யாவரைப் பாடுவம் கொல்; தமிழ்க் கழகத்தை முதல், இடை, கடை என மூன்று முறை நிறுவி, முத்தமிழையும் புரந்த செந்தமிழ்ச் சான்றோர்கள் அன்றையே மாய்ந்து போயினர்; அக்கழகங்களைப் பேணிய தமிழரசுகளும் காலத்தாக்குதலில் பொடிந்து போயின. இனி, வெற்றியும் தோல்வியும் இல்லை; இற்றையோ இரப்பவர்க்கு ஒன்று தருபவரும் இலர் , தரினும் உள்ளம் மகிழ்ந்து நன்றி நினைப்பவரும் இலர் கல்வியைச் செப்பமுறக் கற்பவரும் ஈண்டிலர். உள்ளத்தால் சிறந்தவர்களும் இலர் ஊர் மக்கள் உய்ய வேண்டும் என்றெண்ணி அவர் பொருட்டாய் உழைப்பவரும் இலர். கள்ளத்தையே முதலாகக் கொண்டு, களவையே ஊதியமாகப் பெறும் நோக்கில், பொய்ம்மை வாணிகஞ் செய்யும் போலி வாழ்க்கையினரே இங்குளர். மெய்ம்மை அற்ற சமயங்களையும் சாதி வேறுபாடுகளினின்று மீளாத தன்மையினையும் கொண்ப கொடிய புல்லிய மக்கள் கூட்டம் வீழ்ந்தழிந்து, செய்யுள் தோன்றுவதற்க்கு கருவாக நிற்பவர்கள் தோன்றுகின்ற நாள் வரைக்கும்.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/252&oldid=1209129" இலிருந்து மீள்விக்கப்பட்டது