பக்கம்:நூறாசிரியம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

253


குறைந்து விட்ட தமிழ் மொழியின் சிறப்பியல்களை மீண்டும் புதுமை செய்து மலர்ச்சியுறச் செய்யும் மாணவர்களின், இவ்வலிந்த முயற்சி (அழிவின் பாற் பட்டதன்று); அறத்தின் பாற்பட்ட செயலே என்று கருதி மகிழாதவர்கள் (எவரேனும் இருப்பின் அவர்கள்) கொடுமையான வல்லதிகார அரசியல் கொள்கை உடையவர்களாகவே இருத்தல் வேண்டும்.

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்திறங் காக்க வெழுந்த மாணவருள் அரசேந்திரனைக் கொல்லுவித்த கழகப் பதிவாளர்தம் உடைமையைத் தீக்கொளுவியழித்த மாணவர் தந்திறம் வியந்து பாடியது இது.

அரசேந்திரன், குண்டடிபட்டு மாய்ந்தான் என்ற செய்தி கேட்டதும், மாணவர்கள் , இதற்கெல்லாம் அடிப்படை, பல்கலைக் கழக வளாகத்திற்குள் காவலர்களை வரவிட்ட பதிவாளரின் செயலன்றோ என்று எண்ணி, வெகுண்டெழுந்து, அவர் வீடு சென்றனர். செல்லவும், கழகப் பதிவாளர் அதன் முன்பே, தம் வீட்டைப் பூட்டிவிட்டுக் குடும்பத்துடன் வெளியேறியிருந்ததைக் கண்டனர். காணவும், மீண்டும் கொதிப்பு மேலிட்டவராய் அவர் வீட்டை உடைத்து, உள்ளே இருந்த அவரின் உடைமைகளையெல்லாம் வெளியே எடுத்துக் கொண்டு வந்து போட்டுக் குவித்துத் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கினர். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள், அம் மாணவர்களின் எழுச்சிக்குத் தமிழ் அன்றோ காரணம் என வியந்தனர். அந்த நிலையை நேரில் கண்டு வியந்து எழுதியதாகும் இப்பாடல்.

கவுள் - யானையின் கதுப்பு, கன்னம்

நனைவேழம் - மத நீரால் நனைக்கப்பட்ட ஆண்யானை,

கணை பட்டாங்கு - ஏற்கனவே மதம் பிடித்துள்ள ஆண் யானையின் மேல், அம்பு தைத்தது போல்.

செயிர்வு- கடுஞ்சினம்.

கல்விச் செவ்வியர் - கல்வி பயிலும் மாணாக்கர்கள். மாண்பு என்னுஞ் சொல்லின் அடிப்படையாகத் தோன்றிய மாணாக்கர் என்னுஞ் சொல்லுக்கு இணையான புதுச்சொல், செவ்வியர்.

ஒரு தலை மா மணி - மாணவர்களுள் தலை சிறந்த வீரனாகிய அரசேந்திரன்.

உகுத்தோன் - உயிரை உகுக்கச் செய்தோனாகிய பதிவாளன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/279&oldid=1220223" இலிருந்து மீள்விக்கப்பட்டது