பக்கம்:நூறாசிரியம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

நூறாசிரியம்


பெயர்த்த- வெளியேறிப் புறம்போகிய, எவர்க்கும் தெரிவியாது சென்றமை பெயர்தல் எனலாயிற்று.

மனைமுகத்து.குவித்து- பதிவாளனின் மனையின் முன்றிலில் அவனது தனி ஈட்டமாகிய மனையடை பொருள்களைக் கொண்டு வந்து குவித்து, தனியீட்டம் என்றது அவன் அல்வழியில் தொகுத்த குறிப்பாயிற்று.

குவித்து- ஒன்றெனக் கூட்டி

முழங்கு விறல் பறை- வெற்றிப் பண் முழங்கித் தொய்ந்த பறைத் தோல்,

முருக மூட்டும் அழல் போல் - பறைத் தோலின் தொய்வு நீங்கிச் சூடேறி விறைப்புறுதற்கு மூட்டுகின்ற எரி நெருப்புப் போல்,

வெவ்வெரி அடர - வெப்பமான தீ நாக்குகள் நெருங்கி எரிய.

காட்சி கண்டோர் - அக்காட்சியினை நேரில் கண்டவர்களே ;

தமிழ் கண்டோரே - உண்மையில் தமிழ் மொழியின் ஆற்றலைக் கண்டவர்கள் ஆவார்கள்.

மாணவர்கள் பதிவாளனின் உடைமைகளை அவர் வீட்டினின்று வெளியே எடுத்துக் கொண்டுவந்து போட்டுக் குவித்துத் தீமூட்டி எரித்தது. அவர்கள் தமிழ் மொழியை இந்தி நுழைப்பினின்று காக்க வெழுந்த எழுச்சியினால் ஆதலின், அவ்வெழுச்சிக்குக் காரணமாகிய தமிழ் மொழியின் உணர்வாற்றாலே மாணவர்களின் உள்ளூர நின்றது, என்றது.

பூட்கை - கொள்கை உறுதி.

பூட்கை.... தமிழறிந்தோரே!- மாணவர்களின் கொள்கை உறுதியை நேரில் அறிந்தவர்கள்தாம். (அதற்குக் காரணமாகிய தமிழ் மொழியின் சிறப்பியல்கள் இவ்வளவு உறுதியைத் தர வல்லனவா என்று எண்ணித்) தமிழை உண்மையில் அறிந்தவர்கள் ஆவார்கள்.

பொன்றிய - குறைந்த, மறைந்த

தமிழ்ச்சீர்- தமிழ் மொழியினது பழைமை, புதுமை, முதுமை, இளமை, தனிமை, இனிமை, திண்மை, நுண்மை, புகன்மை, (புகலுந் தன்மை) , அகன்மை (விரிந்த தன்மை) உண்மை,எண்மை(எளிமை), நயன்மை (விரும்புந் தன்மை), இயன்மை, (இயற்கைத் தன்மை), தாய்மை, தூய்மை, வியன்மை, பயன்மை, (பயன்படும் தன்மை), எழின்மை, பொழின்மை (பொருள் தரும் தன்மை), இழுமை(இளகல் தன்மை), முழுமை (நிறைந்த தன்மை), செம்மை, மும்மை (இயல், இசை நாடகம் எனும் மூன்றியல் தன்மை), சீர்மை, ஓர்மை (ஓரியல் தன்மை-ஒருமைத் தன்மை) ஆகிய இருபத்து ஆறு சிறப்பியல்களை),

புதுக்கி-(இவ்வாறு தமிழ் மொழியின் சீர்மைகள் பலவாக இருப்பினும், அவை நலிந்தும் மெலிந்தும், திரிந்தும் திசைந்தும், மறைந்தும் குறைந்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/280&oldid=1220224" இலிருந்து மீள்விக்கப்பட்டது