பக்கம்:நூறாசிரியம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

257

நல்ல புகழை உடைய தமிழ்மொழியே, நீ வையமானது இருக்கின்ற நாள்வரை இருந்து வாழ்வாயாக!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

கல்லாப் புலைமொழி இந்தியை எதிர்த்து நின்ற செல்லா நல்லிசை மாணவர் தமக்கு உள்ளுணர்வு கீண்டிய தமிழை வாழ்த்திப் பாடியது இது.

“இந்தி நுழைப்பால், தமிழ் உணர்வு கொளுத்தப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து மாணவர்கள், கலவரத்தின் காரணமாக உணவு விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னை, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆங்கிருந்து தெருத் தெருவாய் இந்தியை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டு ஊர்வலம் சென்றும், இந்தியை எதிர்க்கின்ற கொள்கை வரிகளை ஆங்காங்குள்ள சுவர்கள் தொறும் எழுதியும், நீண்ட கறுப்புக் கொடிகளைப் பல வீடுகளில் ஏற்றியும், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டி, ஆங்குள்ள நீண்ட தொடர்வண்டிகளைத் தடுத்து நிறுத்தியும், கல்விச் சிறப்பில்லாத புல்லிய இந்திமொழியைக் கற்கத் தூண்டிய அறிவற்ற அரசு ஆளுமையைக் கடிந்தும், அவற்றால் காவலர்களின் பிடிக்குள்ளாகிச் சிறைப்பட்டும், அவர்களால் உடல் உறுப்புகள் ஊறுபடுமாறு அடிபட்டும், அக்காலும் அடங்காமல், நெருப்புப் போலும் சுடுகின்ற சொலவகங்களைக் கூறியும் நின்ற, பருத்த தோள்களை உடைய மாணவர்களுக்கு அவர்கள் அத்துணை வீர உணர்வு பெறுமாறு, அவர்களின் உள்ளுயிரைக் கிளர்ச்சியுறத் தூண்டிய, தாழ்ச்சியுறாத நல்ல புகழையுடைய தமிழ் மொழியே, நீ, உலகம் உள்ளளவும் நின்று வாழ்வாயாக” என வாழ்த்தியதாகும் இப்பாடல்.

அண்ணாமலை செய் பல்கலைக் கழகத்து - கல்வி வள்ளல் அண்ணா மலையால் கட்டுவிக்கப் பெற்ற பல்கலைக் கழகத்தின்.

உண்ணில் போக்கிய - உண்ணுகின்ற இல்லமாகிய உணவு விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட.

இளையோர் - இளைமை பொருந்திய மாணவர்கள்.

அண்மி - ஒன்றுகூடி

தெருவல்ம் வந்து - தெருக்கள் தோறும் ஊர்வலம் வந்து.

சூளுரை முழக்கி - கொள்கை உறுதிகளை உரக்க ஒலித்து.

ஒள்ளிய கொள்கை - தெளிந்த அறிவார்ந்த கொள்கை மொழிகளை

மைநிற நெடுங்கொடி - கறுப்பு நிறமுடைய நீண்டகொடி

பன்மனை தூக்கி - பல வீடுகளிலும் தூக்கி நிறுத்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/283&oldid=1221154" இலிருந்து மீள்விக்கப்பட்டது