பக்கம்:நூறாசிரியம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

265


குறிகோள் எஃகம் அதிர- (மாணவர்கள் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன்) குறி வைத்தவாறு வேட்டெஃகத்தைத் தாங்கி, அஃது அதிரும்படி, சுட்டுக் கொண்டே

படர்ந்தாராக - பரந்துபட்டு வந்தாரக.

எதிர் தலைப் பட்ட எம் மாண் மகனே - (அவ்வாறு வந்த காவலர்கள் முன்னம்) எதிர்ந்து போய் இறந்து பட்ட மாட்சிமை பொருந்திய எம் ஆண் மகனே, இவன்!

எம் என்றதால் தந்தையும் உடனிருந்தது பெறப்பட்டது.

பாகன் தன்னைக் கோட்டியால் துன்புறுத்தியதால், யானை மிக்க சினம் கொண்டது. எனவே மதங் கொண்டது. உடனே தன் முதுகில் ஏறியிருந்த பாகனைத் தன் தும்பிக்கையை நீட்டி, வாரித் தரையில் அறைந்து கொன்று, தலையை மிதித்துத் துவைத்தது.

அதுபோல் இந்திமொழி என்னும் கோட்டியால் அடிக்கடி துன்புறுத்திய பொய்யர் சூழ்ந்த அரசைச், சினங்கொண்ட மாணவர் துவைத்தெடுக்கப் போர்க்கோலம் பூண்டனர் - என்று உவமையை ஒருபுடைப் பொருத்திப் பொருள் கொள்க.

‘அடர்ந்தெழுந்த சினங்கொண்ட மாணவர் எழுச்சியைத் தடுத்து நிறுத்தும் பொருட்டுக் காவலர்கள், குறிவைத்தவாறு வேட்டெஃகம் தாங்கிப் படர்ந்து வந்தனராக, அவர் முன்னம், அஞ்சாமல் எதிர்ந்துபோய், அக் குண்டடிபட்டு இறந்து பட்ட மாட்சிமை பொருந்திய எம் மகன், இவன்’ என்று அவனைப் பெற்ற நற்றாய், அவன் யார், ஏன் இறந்தான் என்று கேட்ட அயலார்க்கு இஃது உரைத்தனள் என்க.

இப்பாடல் முன்னது திணையும் மாண்மகன் துஞ்சல் என்துறையும் என்க. திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/291&oldid=1221404" இலிருந்து மீள்விக்கப்பட்டது