பக்கம்:நூறாசிரியம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

286

விரிப்பு :

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது

தான் அன்புடன் வளர்த்த மகள், தன் அன்னையையும் தன்னோடு ஒத்த ஆயத்தையும், தன்னைப் பேணிப் புரக்கும் தந்தையையும், தன் உடன் பிறந்த தங்கையையும், தன் உறவினர்களை மறந்தும், எண்ணிப் பாராமலும், தான் காதலித்து உடன்போகிய இளைஞனால் வரும் விளைவுகளையும் எண்ணிப்பாராமல் விளையாடிக் கொண்டிருக்கும் மிக்கிளம் பருவத்தினளாகிய இவள் வீட்டை விட்டு வெளியேறிப் போனது, யார் பயிற்றுவித்த துணிவினால் என்று செவிலித்தாய் புலம்பி வருந்தியதாகும் இப்பாடல்.

அன்னையும் மறந்தாள் - மறப்பதற்கும் அரியளாகிய தன்னைப் பெற்ற தாயையும் மறந்தாள்.

‘உம்மை சிறப்பும் அருமையும் உணர்த்தியது.

ஆயமும் மறந்தாள்-தன்னோடொத்த மகளிர் கூட்டத்தையும் மறந்தாள்.

அன்னைக் கடுத்தபடி தன்னொடு நெருங்கியிருந்து பழகியும் பயின்றும் ஆடியும் மகிழ்பவர் அவளொத்த தோழியராகலின் அவரையும் மறந்தாள் என்பது வியப்புக்குரியது.

இன்ன பண்பினன், இணையருளாளன் என்றிவை தேராது - இன்ன பண்பினை உடையவன், இந்த அளவின் அருளாளன் என்னும் இவ்வியற்கைப் பண்புகளைத் தேரவியலாதவளாகி,

பெண் ஒருத்தி, தான் மணக்கப்போவானைப்பற்றி அறிந்து கொள்வதற்கு இன்றியமையாத குணங்கள் இரண்டு ; அவை அவனது பண்பும் அருள் தன்மையுமாம் என்க.

பண்பு அவன் அவளை வைத்து நடத்தும் இல்லறத்திற்கும், அருள், அவள்பால் அவன் கொள்ளும் ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் அடிப்படையாம் என்க.

இனி, இவ்விரண்டு பண்புகளையும் உலகியலறிவு சான்ற முதியோரே அன்றி அவன் புறவெழிலால் மயங்கும் காதற்பெண் அத்துணைச் சிறப்பாகத் தேர்தற்கு இயலாததாகையின் தேராது’ என்றாள்.

இனி அவ்வாறு தேர்தற்கு உரியவருள் அவள் தந்தையே தக்கவராகலின், அக் கருத்தினைத் தொடர்ந்து அத்தகு தந்தையும் மறந்தாள்என்றாள் என்க.

மற்றிவள் விழுமத்து, விழுமம் - பெருமை, மற்று, இவள் பெருமையினாம்; தன்மையினாலும் சிறப்பு, நன்மை எனும் பலபொருள் படும் ஒரு சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/312&oldid=1209162" இலிருந்து மீள்விக்கப்பட்டது