பக்கம்:நூறாசிரியம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

நூறாசிரியம்


68 நானுகம் பெரிதே


நானுகம் பெரிதே நாணுகம் பெரிதே
மாணுறு தீந்தமிழ் மகனை யாகி
பூப்பறு நெஞ்சுகப் புரிந்து நாணொடு
காப்பறு நாவின் மீச்சுவை மிசைந்து
செவித்துளை புகுந்த வீரொரு பிறசொற் 5
கொள்ளார் வழியும் இடையிடைக் கிளந்து
கல்லாப் புல்லுரை கரைந்து கடுப்புற
வல்லேம் யாஅம் எனவலம் வரூஉம்
வெம்மார் மாக்களை விதந்து
நம்மோர் எனற்கு நாணுகம் பெரிதே’ 10


பொழிப்பு

யாம் பெரிதும் நாணுகின்றேம்! யாம் பெரிதும் நாணுகின்றேம்! மாட்சிமை பொருந்திய இனிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மகனாகப் பிறந்தும், மலர்ச்சியுறாத தன் மனம் விரும்பியவாறெல்லாம் செயற்பட்டு, நாணமும் அடக்கமும் அற்ற தன்நாவினால் சுவைமிகு உண்டிகளை உட்கொண்டு, தன் செவியாகிய துளையின்கண்ணே புகுந்த இரண்டொரு வேற்றுமொழிச் சொற்களை அவற்றை விளங்கிக் கொள்ளாதவரிடத்திலும் இடையிடையே வெளிப்படுத்தி, முறையாகக் கற்றுத் தெளியாத புல்லிய சொற்களால் உரையாடி ஆணவத்தோடு யாஅம் பெரிதும் வல்லமையுடையேம்’ என்று ஊரைச் சுற்றி வருகின்ற கொடுமை வாய்ந்த கயவர்களைச் சிறப்பித்து நம்மேவர்கள் என்று கூறிக் கொள்வதற்கு யாம் பெரிதும் நாணுகின்றேம்.

விரிப்பு:

இப் பாடல் புறப்பொருள் பற்றியது.

சிறப்பு மிக்க தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மகனாய் இருந்தும் மனம் பண்பட்டு விரிவடையப்பெறாது அதன்வழி விரும்பியவாறெல்லாம் செயற்பட்டுச் சுவைபட உண்டு நவைபடப் பேசிச். செருக்கொடு திரியும் இழிதகையாளரை அவர் தமிழர் என்பது பற்றி நம்மவர் என்று சொல்லிக் கொள்வதற்கு நாணிப் பாடியது இப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/334&oldid=1221174" இலிருந்து மீள்விக்கப்பட்டது