பக்கம்:நூறாசிரியம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

309

நூறாசிரியம்


நானுகம் பெரிதே நானுகம் பெரிதே; மாந்தர் தம் நிலைக்குப் பொருந்தாத கருமங்களைச் செய்யப் பின்வாங்குதல் நாணம் எனப்படுதலின், ஈண்டு ஆசிரியர், தமிழினத்துப் பிறந்தார் சிலர் இழிதகையாளராய் இருந்தும் அவரைச் சிறப்பித்து நம்மவர் என்று சொல்லிக் கொள்வதற்குப் பெரிதும் நானுகின்றேம் என்றார்.

அடுக்கு இளிவரல் மிகுதியான் வந்தது!

மானுறு தீம் தமிழ் மகனை யாகி; தலைக் கழகக் காலத்திற்கு முன்பே வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் முதன்முதலாக உயிர் மெய்க்குந் தனிவடிவு கண்டு ஒலியன் முறையில் நெடுங் கணக்கு வகுத்து, எண்பெயர் முதலிய பத்து அகமும் கிளவி புணர்ச்சி என்றும் இருபுறமுமாகிய பன்னிரெழுத்திலக்கணமும் தோற்றி, இயல் திரிவு திசை என்னும் மூவகைச் சொல்லும் முதனிலை ஈறு முதலிய அறுவகைச் சொல்லுறுப்பும் தொகையும் விரியுமாகிய பதினால்வகைச் சொற்றொடரும் ஆய்ந்தும், மருளறு சிறப்பின் பொருளிலக்கணம் கண்டும் இருவகை வழக்கினும் அருகுதலில்லா என்றுமுள தென்றமிழ், பன்னெடுங் காலத் தொன்மையும் ஏனை மொழிகளினு முந்திய முன்மையும் பல மொழிகளைத் தோற்றுவித்த தாய்மையும் பிறமொழிகளால் பிறழாத தூய்மையும், எற்றைக் காலத்தும் ஏற்புற வளரும் இளமையும் சொற்சிறப்பாலும் இலக்கியப் பரப்பாலும் வளமையும்,இலக்கண வரம்பால் செம்மையும் இயல் இசைநாடகம் என்னும் மும்மையும், பழகுறு சிறப்பின் இயன்மையும் பலதுறை கொண்ட வியன்மையும் ஆய்வுச் செறிவால் நுண்மையும் அயன் மொழிகளுக்கும் சொற்பொருள் அளிக்கும் வன்மையும் என்றும் இருக்கும் நிலைமையும் ஏனை மொழிகளின் மேம்பட்ட தலைமையும், கலப்பு வேண்டாத தனிமையும் கேட்பார்க்கும் கிளர்வார்க்கும் இனிமையும் என மொழிநூன் மூதறிஞர் எடுத்துக்காட்டும் பதினாறு வகையின் ஓங்கிய சிறப்பும் பாங்குறப் பெற்ற மொழியாதலின் மாணுறு தமிழ் என்றார். இது மேலும் விரிப்பிற் சாலப் பெருகும்.

தீந்தமிழாவது இனிமை வாய்ந்த தமிழ். மாணுறு தமிழ் எனினே அமையும்; மற்றுத் தீந்தமிழ் என இனிமையை விதந்து வேறுபடக்கூறியது என்னை யெனின், தமிழின் பிற சிறப்புகளெல்லாம் ஆராய்ச்சி வகையான் புல மக்கள் மட்டுமே அறிந்துணரக் கிடக்க அதன் இனிமையோவெனின் இளஞ்சிறாரும், பொதுமக்களும் எளிதிற் சுவைக்குமாறும் மொழியறியா அயலவரையும் ஒலிவகையால் ஈர்த்து இன்புறுத்துமாறும் அமைந்திருத்தலின் அதன் ஏற்றங் கூறுமுகத்தான் அதனைத்தனித்தெடுத்துக் கூறினார் என்க:

செய்யுளும் ஒரு வகை வழக்கே யாயினும் அதன் பெருஞ்சிறப்புக் கருதி வழக்குஞ் செய்யுளும்’ என்ற விடத்து வேறுபடுத்திக் கூறியது போல இதனைக் கொள்க! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/335&oldid=1221175" இலிருந்து மீள்விக்கப்பட்டது