பக்கம்:நூறாசிரியம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

343


கொண்டால் என்றது கொள்ள நேரின் என்னும் பொருட்டு.

தான் விழைந்து என்துதல் மான நீவியன் தோழி - குறிப்பறிந்து தானே விரும்பி என்னுடைய நெற்றியைத் தக்கவாறு நீவியவள் என் தோழி.

தான் விழைந்து - யான் கூறாதவழியும் குறிப்பறிந்து தானே விரும்பி என்றவாறு.

பொருந்தாத புலனுகர்ச்சியால் வருந்துதலின் முதனிலையாவது தலைவலியே யாதலின் அதைத் தணித்தற்குத் தக்கவாறு நெற்றியை நீவிவிட்டவள் என் தோழி என்றாள். நுதல்-நெற்றி.

கோனா நெஞ்சக் குறிப்பு அறியாளே - கோணுதல் இல்லாத உள்ளத்தின் குறிப்பை அறியாதவளாயினளே!

கோணா நெஞ்சம்-கற்புநெறி திறம்பாத நெஞ்சம். அறியாளே அறியாதவளே என்னுமாறு ஏகாரம் வினாப் பொருள் பயந்தது எனக் கொள்ளினுமாம்.

செவிக்கு இன்னாத இசையும் மூக்கு ஏலாத மோப்பும் துன்பந்த தருதலைக் குறிப்பாலுணர்ந்து அதனைப் போக்கத் தானே விரும்பி நெற்றியை நீவிவிட்டவள். ஆதலின் உள்ளத்துக்கு ஏலாத இம் மணவினையைத் தவிர்ப்பாள் என்றவாறு.

கற்புநெறி திறம்பாத உள்ளத்துக்கு இஃது ஏலாதது என்னுங் குறிப்பால் அவள் தலைமகன்பால் காதல் கொண்டமையைத் தெரிவித்தாள்.

இப் பாடல் குறிஞ்சியாகிய அகத்திணையும் அறத்தொடு நிற்றல் என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/369&oldid=1209385" இலிருந்து மீள்விக்கப்பட்டது