பாவலரேறு பெருஞ்சித்திரனார்
347
குவடேய்ங் கூரை சுவடுபடப் பதிந்த
குடுக்கைப் பசுங்காய்ச் சுருட்கை போலப்
படர்கொள வலையுஞ் சுடர்க்கொடி நெஞ்சம்
இடர்பெறுந் தகைதில் பெரும! ஈனியர்
பொய்நிழல் வேட்டெனும் புரைசொன் மாற்றி
5
மொய்குழ னளைந்து முயங்கியாக் காலே!
பொழிப்பு:
மலைமுகடு போல் உயர்ந்து விளங்கும் கூரை தன் அடையாளத்தைக் கொள்ளுமாறு பதிந்திருக்கின்ற குடுக்கையாகும் பசுமை பொருந்திய காயையுடைய சுரைக்கொடியின் சுருளும் கையே போல், பற்றிப் படர்தற்கு அலைகின்ற ஒளிபொருந்திய கொடி போலும் தலைவியின் நெஞ்சம் துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையதில்லை; பெருமகனே, பெற்றோர்தம் பொய்யான களைகண் விரும்பியுறைகிறாள் என்னும் ஊரவர் பழியுரையை மாற்றித் தலைமகளின் அடர்ந்த கூந்தலை நீவி அவளொடு கூடாதவிடத்து.
விரிப்பு:
இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.
தலைமகள்பால் களவு நிலையில் காதல் கொண்டொழுகும் தலைமகன் அவளை வரைந்து கொள்ளுதற்குக் காலம் நீட்டித்தானாக, தோழி அவனைநோக்கி, கரைக்கொடியின் சுருட்கைபோல் கொழுநனைப் பற்றுதற்கு அலைகின்ற தலைமகளின் நெஞ்சம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையுடைய தன்று இவள் பெற்றோரின் ஆதரவில் உறைதலையே விரும்புகிறாள். என ஊரவர் கூறும் பழியுரையைப் பொய்யாக்கி அவளை விரைவில் வரைந்து கொள்ளுக எனத் துண்டுவதாக அமைந்தது இப் பாட்டு.
குவடு ஏயும் கூரை சுவடுபட -மலை முகடு போல். உயர்ந்து விளங்கும் கூரை தன் அடையாளத்தைக் கொள்ள,
வீட்டின் கூரை தொலைவிலிருந்தார்க்கும் தெரியுமாறு உயர்ந்து நிற்றலின் குவடு ஏய்ங் கூரை என்றார். குவடு மலை முகடு, மலையுச்சி.