பக்கம்:நூறாசிரியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

17


அகவாழ்க்கை அடிப்படுக்கும் - புல்லிய புற வாழ்க்கையை வெறுத்து, ஒளிசான்ற அகவாழ்க்கைக்கே அடிப்படுக்கும் உணர்வு. அகவாழ்க்கை - நல்லார் போய செந்நெறி நயக்கும் வாழ்க்கை; நாவும் நெஞ்சும் ஒன்றி நடக்கும் வாழ்க்கை.

மூட்டம்- அத்தகை வாழ்க்கையின் உள்ளார்ந்த உணர்வுகள் நிறைந்த நிலை. இந்நிலையின் அடங்கிக் கிடக்கும் நெஞ்சம்.

முற்றா நெஞ்சம் - இளமை நெஞ்சம். கள்ளமும், கவடும், பொய்யும், புனைவும் - சூழாது மென்மையும், இளகலும் சான்ற உள்ளம். உள்ளத்து இளமையும், அறிவின் முதுமையுமே சான்றோர்க்கு உவக்கும் தன்மையவாகலின், அப்பொருள் தோன்றக் கூறியது.

நெஞ்சு முற்றுதல் எதிர்ப்படும் மெல்லுணர்வுகளை அறியாது போதல் பற்றி, வேண்டுவது இளமை நெஞ்சமே என்றபடி உள்ள உணர்வுகள் மென்மை சான்றும் அறிவுணர்வுகள் வன்மை சான்றும் இருத்தலே இவ்வுலக வாழ்க்கைக்கு இன்பமும், அவ்வாறல்லாது, உள்ள உணர்வுகளில் வ்ன்மையும், அறிவு உணர்வுகளின் மென்மையும் பெறுதல் இவ்வுலக வாழ்க்கைக்குத் துன்பமும் தருதல்பற்றி, முற்றா நெஞ்சின் ஆட்டத்தழுந்திய இன்பம் எனலாயிற்று.

முற்றா நெஞ்சின் ஆட்டம்- மெல்லியது துளிக் காற்றுக்கும் ஆடுந் தன்மை போல், இளமை நெஞ்சம் துளி இன்பத்தையும் பேரின்பமாகக் கொள்ளும் தகையது என்க. ஆட்டம் - அசைவு. உள்ள அசைவுகள் ஒவ்வொன்றும் இன்பமே என்றபடி அத்தகைய இன்பம் எடுத்துரைக்கத் தக்கதும், முழுதும் எட்டத்தக்கதும் அன்று என்பதால், நாட்ட நாட்ட நா நாடாது எனலாயிற்று. அத்தகு இன்பத்திற்கு எல்லையே இல்லை என்பது பொருள்.

இப்பாட்டு, உணர்வு சான்ற அகவாழ்க்கையின் தன்மைகளைக்கூறி, ஒப்புரவாட்சியின் அகப்புறக் காட்சிகளைக்காட்டி, துன்புறு மாந்தர்தம் துயர்க்கு அவர் தாம் அகவாழ்க்கைக்கு அடிப்படுக்கா நிலையே கரணிய மென்றெடுத்து விளக்கி ஆற்றுப்படுக்கும் வஞ்சித்தளை பொதுளிய நேரிசை ஆசிரியப்பாவாம்

இப்பாட்டு பொதுவியல் என் திணையும், முதுமொழிக் காஞ்சி என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/43&oldid=1221616" இலிருந்து மீள்விக்கப்பட்டது