பக்கம்:நூறாசிரியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

31


அளியின் இரங்கி - அருளால் இரங்கி. அருளல்-அன்பால் முதிர்தல். அறிந்தவிடத்துச் செலுத்தல் அன்பு அறியாவிடத்தும் செலுத்துதல் அருள். அறியாவிடத்துச் செலுத்தப்படும் அருள், பின் அறிந்தவிடத்து அன்பாகக் குறுகுமோ என்பார்க்கு, அஃதன்று; அன்பிற்குரியர் தொடக்கத்து அறியாரேயாயினும் அவர்பால் முற்செலுத்துதல் அருளன்று: கண்ணோட்டம் என்க. மேலும் அறியாவிடம் முகநோக்கில்லா இடம் மட்டும் அன்று அறியாமை மிக்க விடமுமாம் எனக் கொள்க.

புலத்துறுப்பு உய்க்கும் சான்றவர் - ஐம்புலவுணர்வினை மெய்யுணர்விற் படுத்தும் சால்பு மிக்கவர். உளர்-உளராக, சாலுதல்-நிறைதல் தன்மை அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்பன போலும் மீமிசை மாந்தத் தன்மைகள் நலியாது பொருந்தி நிறைதல்.

வெம்மை மாக்கள் -கொடுமை நிறைந்த விலங்கின் தன்மையர், வெம்மைகொடுமை, கொடுமை-வளைதல் தன்மை, வெம்மை(சூடு) பட்டது கோடும் (வளையும்) ஆகலின் வெம்மைக் கருத்தினின்று கொடுமைக் கருத்து தோன்றியது. மாந்த நிலையினின்று கோணிய தன்மை நிறைந்த மாந்தப் போலிகள் புலனறிவை உள்வாங்கி, அகத்தறிவை வெளிக்கொணராது, புலனறிவைப் புறஞ்சிதர்ந்து, அகத்தறிவை உட்புதைக்கும் அறியாமை மிக்கவர். ஏதங்கொண்டு ஊதியம் போக விடும் பேதையர் இவர்.

வினையழிவார்- இவர் பேதைமை நீங்கினும் வழிமாறியவர். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையர் தம் அகமுனைப்பாலும், புறமுனைப்பாலும் தத்தமக்குற்ற வினைப்பாடுகளில் அழிந்து படும் தன்மையர்.

மும்மையும் உளர்- மூன்று காலத்தும் உளராவர். தீமை அன்றன்று தோன்றி, விளங்கி, அழிதலுறும். நன்மை அன்றன்று தோன்றி, விளங்கி நிலைநிற்கும். தீமை மக்கட்கு இறங்குபடியும் நன்மை ஏறுபடியும் ஆகும். வாழ்நிலைப் படிகளுள் எதிரெதிராக வந்து கொண்டிருக்கும் தியோரும் நல்லோரும் தத்தமக்குற்ற நல்லோராலும் தியோராலும், ஆட்கொள்ளப் பட்டும் ஆட்கொளுவிக்கப்பட்டும் உய்கின்றனர். இனி, நன்மையும் தீமையும், உண்மையும் பொய்மையும், ஒளியும் இருளும் போல் ஒருமையின் அகப்புறமான இருமை நிலைகள். இவ்விரு படித்தான நிலைகளில் இருளினின்று ஒளிக்கு நடப்பதே வாழ்வாகும்.நடப்பு பின்னோக்கியதாயின் உயிர் பிறப்பினின்று உய்ந்து போதல் இல்லை என்க. இவ்விரு நிலைகளின் பிறவேறாந் தன்மைகளை மெய்ந்நெறி நூற்களில் விரிவாகக் கண்டுணர்க.

உய்யல் வேண்டி -உய்தல் விரும்பி - வேண்டுதல் - விரும்புதல்.

பன்னூல் நுவன்று - அறிவும், உளமும் புலப்படும் படியான பலவகை நூல்களில் எடுத்துக்கூறி, நுவலல் நூல்வழிச் சொல்லுதல்.

பாதை தெரித்தல் - அவர் செல்லும் அறவழிகளைத் தெளியக் கூறுதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/57&oldid=1221670" இலிருந்து மீள்விக்கப்பட்டது