பக்கம்:நூறாசிரியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

37


மாதம் - காதல் உள்ளம் கொண்ட இளம் பெண்டிர்.

மாதர் காதல் (தொல்-உரி-30) (இது தூய தனித் தமிழ்ச் சொல். இதனை 'மாதா' எனும் வட சொல்லினின்று வந்ததென அறியார் கூறுவர். மாதா எனும் வட சொற்குத் 'தாய்’' என்பது பொருள். ஆனால் தமிழில் 'மாதர்’ என்ற சொல் அழகு, இளமை, காதல் என்று பொருள் பெற்று, அவ்வழகும் இளமையும், காதலும் உடைய பருவப் பெண்டிரை மட்டுமே குறிக்கும் உயர் தனிச்சொல். தமிழ்மொழிச் செழுமையும், வளப்பமும் ஆற்றலும் அறியாப் பேதையோர் சிலர் ஆரியப் போலிப் பொய்யுரைக்கு அடிதாங்கி இழிவழக்காடுதற்குத் தமிழ் மக்கள் விழிப்புற்றிருக்க முது பெண்டிர் பழந் தமிழ் நூல் வழக்கில் மாதர் என்ற பெயரால் குறிக்கப் படுவதிலர் ஒலி நூலும், சொன்னூலும், மொழி நூலும் அறியா வல்லடி வழக்கார் சிலர்தம் சொல்லாடல்களுக்குத் தமிழர் செவி மயங்காதிருக்க)

மனமிதித்தல் - பிறநினைவழித்துத் தன் நினைவழுத்தித் துன்புறுத்தல். இளையோனாக வளர்ந்து காதன் மாதர் தம் மனங்களைத் துன்புறுத்தி நின்றானுக்கு மணம் செய்வித்த நிகழ்ச்சியை இனிக்கூறுவான் தொடங்கினள் என்க.

பனைத்தெழுந்த இனை நகிலம் - புடைத்த விம்மி நெருங்கி வளர்ந்த கொங்கைகள்.

குறு நுகப்பு - ஒடுங்கிய இடை.

வால் எயிறு - வெண்மையும், கூர்மையும் கொண்ட பல் வரிசை.

கழை தோளி- மூங்கில் கழை போன்ற பசுமையும் இளமையும் ஒளியும் பொருந்திய தோளையுடைய பெண்.

முனையொரு நாள்- முன்னொரு நாள்.

வரைக் கொண்டு - மனங்கொண்டு. வரைதல் - மணத்தல். வரை எனுஞ் சொல் நெறி எனும் பொருள் பட்டு, உலக நெறியாகிய திருமணத்தைக் குறிக்கும்.

மனை தனி வைக்க -தனி மனையில் வாழும்படிச் செய்ய.

இளைஞனாகி நின்ற தன் மகனுக்கு அழகும், இளமையும், தகுதியும் சான்ற இளம் பெண் ஒருத்தியை மனங்கொண்டு, அவரிருவரையும் தனி மனையில் வைக்க என்றபடி.

எம் சிறுமகன் - எம்முடைய சிறியோனாகிய மகன் பெற்றத் தாய்க்கு தம்மகன் என்றும் இளையோனாகவே படுவானாகையால் சிறு மகன் என்றாள்.

பிள்ளையைப் பெறுவிக்காப் பருவம் வாய்ந்தோன் என்று தான் கருதியிருப்ப, அவன் தானும் ஒரு பிள்ளையைப் பெறுவித்துக் கொண்டானே என்ற வியப்புத் தோன்ற அவனைச் சிறுமகன் என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/63&oldid=1221679" இலிருந்து மீள்விக்கப்பட்டது