பக்கம்:நூறாசிரியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நூறாசிரியம்


குவடுபட நடந்த சுவடு- குன்றம் பொடிந்து போமாறு நடந்த நடையான் அமைந்த சுவடு நடைக்குப் பெருமிதங் காட்ட வேண்டிக் குன்றம் பொடியும் நடை எனலாயிற்று. ஒருவரின் வாழ்க்கைப் போக்கின் பெருமிதப் போக்கினை உணர்த்துவது ஒருவரின் நடையே ஆகலின் நடை முதற்கண் கூறப் பெற்றது. நடையெனினும் போக்கு எனினும் ஒன்றேயாகி, அவர் வாழ்ந்த பெருமிதமான வாழ்க்கைப் போக்கினைக் கூறிற்று இவ்வடி

இனி, நடைக்கடுத்து, ஒருவரின் பெருமிதம் அவர் குரலான் வெளிப்படலால் அவர் குரலின் செம்மாப்புக் கூற வேண்டுவதாயிற்று.

வான்பட்டு அதிருங்குரல்-வானின்கண் பட்டுத் தெறிக்கும் குரல். அதிர்தல் ஒலித்தெறிக்குதல். ஒருபுடை நின்று எழுப்பிய அவர் குரல் எண்டிசையும் பரந்து பட்டுச் சென்றது கூறப்பட்டது.

மெல்லுயிரைச் சிதைத்தல் எளிதாகலான் வல்லுயிரைச் செகுத்த விழி எனப் பெருமிதந்தோன்றக் கூறப் பெற்றது. உயிரைச் செகுத்தலும், மனத்தை வெருவித்தலும், உடலைக் கொல்லுதலும் செய்யும் அயில்விழி என்று கூறப்பெற்றது.

அயில்- வேல், உயிரை அயிலுதலால் வேல் அயில் எனப் பட்டது. அயிலுதல் உண்ணுதல்.

அவர் நடந்த மிடுக்கான நடையின் சுவடு தோயாமையும், அதிர்ந்த குரலின் செம்மாப்பு இன்னும் அடங்காமையும், பகைவர் அஞ்சும்படிச் செய்து அவர் உயிர் செகுக்கும்படி நோக்கிய பெருமிதம் சான்றவிழி இன்னும் மூடாமையும், அவர் ஒச்சிய தடங்க்ைகளின் வீச்சு இன்னும் ஒயாமையும் இன்றும் நம்மிடையே இருப்பார் போன்றதோர் உணர்வை எழுப்புகின்றன என்க.

இமை குவிதல் - விழி மூடுதல்.

அவரின் திறந்த விழிகளையே கண்டு அவரின் மூடிய விழிகளைக் கண்டிலோம் ஆகையால் அவர் பார்வையே இன்னும் நம் நெஞ்சில் உளதாகின்றது.

முங்குதல் - முழுகுதல்.

அன்னைத் தமிழ் - பிறமொழிகளுக்கு அன்னையாகி நின்ற தமிழ்.

தீச்சுடர் எழுத்து தீயின் ஒளி நாக்குகள் போன்று சூடு கொளுத்தும எழுத்து.

பாச்சுடர் கொளுத்தி - பாவின் சுடரை மக்கள் நெஞ்சில் ஏற்றி

ஓச்சுதல் - உயர அலைத்தல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/82&oldid=1181342" இலிருந்து மீள்விக்கப்பட்டது