பக்கம்:நூறாசிரியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

59


13 கழைமென்றோளி


தணந்த சுறவத்து மணந்த மாணிழை
அணைந்த சுறவமுன் அகறல் ஆகின்றே!
புணர்ந்த தோளும் பொலிவழிந் திலையே!
நிணந்த மார்பும் நிமிர்பழி கிலையே
மன்றற் கூறையும் மடிகலைந் திலையே! 5
கலியெழு கிளைமுன் கவிழ்ந்த புன்றலை
இன்றும் ஏர்ந்தன் றிலையே! எழுதிய
கால்வரிக் கோலமும் கலைந்தன் றிலையே!
சுடரொளி வாணுதல் வெளிறப் பொதிகுழல்
படர்ந்து நிலம்புரள இடைநுடங்கிப் 10
புறமஞ்சி யுள்ளழுங்கும் புனல்வார் கண்ணொடு
கையற்று ஞெகிழும் கழைமென் றோளிக்கு
உறுநாள் உவப்புற வேண்டி
மறுமணம் புணர்த்தீம் மனைவாழ் வோரே!


பொழிப்பு :

நீங்கிய (கடந்த சுறவ ஒரையில் (தைத் திங்களில்) மணந்த ஞான்றை அணிந்த பெருமை மிக்க அணி (தாலி), வரவிருக்கின்ற சுறவத் திங்களின் முன் அகலும்படி ஆகிற்றே! கணவனால் தழுவப் பெற்ற தோளும் இளமை ஒளி அழியவில்லையே! புடைத் தெழுந்து நின்ற மார்பும் நிலை தாழ வில்லையே! மன்றல் நாளில் உடுத்துக் கொண்ட புதிய உடையின் மடிப்பும் இன்னும் கலைய வில்லையே! ஆரவாரம் எழும்பும் கிளைஞர் தம்முன் மணநாட் போதில் கவிழ்ந்த, பொலிவிழந்த தலை, இன்றும் நிமிரவில்லையே! அன்று காலின்கண் எழுதப் பெற்ற அழகிய கோலமும் இன்னும் கலைந்து போகவில்லையே! சுடரென ஒளிரும் வளைந்த நெற்றி வெளிறவும், பொதியப் பெற்ற குழல் அவிழ்ந்து நிலத்தே புரளும்படி படர்ந்திருப்பவும், இடை துவளவும், புறத்தே இருப்பார்க்கு அஞ்சியவாறு, அகத்தே மிகுதுயரால் நீர் வழிந்த கண்களோடு செயலாற்றும், உடல், உள்ளம், உயிர் தளர்வுறவும் கிடவாநின்ற இளமூங்கில் போலும் மென்மை வாய்ந்த தோள்களையுடைய இவளுக்கு, இனி, வரவிருக்கின்ற நாள்கள் மகிழ்வுறுமாறு இருத்தலை விரும்பி, மற்றும் ஒரு முறை மணம் செய்வீராக, மனைக்கண் வாழ்தலை மேற்கொண்டு. நிற்பீராகிய நீவிரே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/85&oldid=1181348" இலிருந்து மீள்விக்கப்பட்டது