பக்கம்:நூறாசிரியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

63

புனைவில்லாமை நெய்யில்லாது வறளலும், வாராது பரத்தலும், மலரில்லாது எழில் பெறாமையும் ஆம்

இன்னும் ஏர்ந்தன் றிலையே- அன்று கவிழ்ந்த தலை இன்று வரை நிமிர்த்தப் பெற்றது இல்லையே! ஏர்தல் எழுதல், ஏ-எழுச்சியைக் குறிக்கும் ஒரு முதனிலை. மேல் நோக்கி நின்ற எல்லாப் பொருள் குறித்த சொற்களுக்கும் ஏ சொல் முதலாக நிற்பதை உன்னுக. (எ-டு) ஏர்-ஏண்-ஏணி. ஏறு-ஏற்றம்-ஏக்கழுத்தம்-ஏந்தல்-ஏமாப்பு-ஏவல் (மேற் செலுத்துதல்) ஏவுதல்ஏனாதி (சேனைத் தலைவன்) ஏ-எ, எட்டம் எட்டுதல் (உயர்ச்சிக்குத் தாவுதல்), ஏ-சே-சேண்சேய்மை-செலவு(மேற் செல்லுதல்).சேடு ( உயர்ச்சி, பெருமை) சேட்டன் (மூத்தவன், தனக்கு மேலானவன், முதல்வன்) சேட்டி (மூத்தவள், தமக்கை) தோழியைக் குறிக்கும் “சேடி” என்ற வழக்குச் சொல் முதுமைப் பொருள் குறித்த தூய தனித் தமிழ்ச் சொல்லே. தலைவிக்கு தோழியாக இருப்பவள் மூத்தாளாக இருந்து வழி காட்டுதல் பண்டைய வழக்கம் (இதன் விரிவைப் பாவாணரின் முதல் தாய்மொழியில் காண்க.)

எழுதிப் கால்வரிக் கோலமுங் கலைந்தன் றிலையே - திருமண நாளில் அழகுக்காக இவள் காலின்கண் செம்பஞ்சுக் குழையாலும், பவளக் குறிஞ்சிச் சாற்றாலும் எழுதப் பெற்ற கோலமும் இன்னும் அழிந்த பாடில்லை என்பது. பவளக்குறிஞ்சி-மருதோன்றி. மணம் செய்விக்கப் பெற்று இன்னும் நெடு நாளாகிவிடவில்லை என்ற குறிப்புத் தோன்றக் கூறியது. கோலுதல்.கோலம், கோலுதல்-வரைதல்-எழுதுதல்-சூழச் செய்தல்-வளைதல் முதலிய பொருள்களைக் குறிக்கும்.

வாணுதல் வெளிற - வாள்+ நுதல் என்று பிரிபடும். வாள் நுதல் ஒளி பொருந்திய நெற்றி, வாள்வளைந்த என்றும் பொருள் பட்டு வளைந்த நெற்றி என்றும் கொளப்பெறும். சுடரொளி என்ற முன்னரே அடை பெற்றமையான் வளைந்த என்று கொள்வதே சிறப்பாம். துயர் மேலீட்டால் நெற்றி வெளிறிப் போதலால் 'வெளிற்' எனப்பட்டது.

பொதிகுழல் படர்ந்து நிலம் புரள- அடர்ந்த குழல் என்றும், முன்னர் பொதிந்து வைக்கப் பெற்ற குழல் என்றும் பொருள்படும். பொதிதல் மிடைதல்-பிணித்தல்-உள்ளடக்குதல் முன்னர் பொதியப் பெற்ற குழல் இக்கால் தளையவிழ்ந்து படர்ந்து நிலம் புரண்டு கிடத்தல் என்பது. குழல் நிலம் புரளுதலால் இவள் தரையில் படுத்துக் கிடந்தனள் என்றபடி

இடை நுடங்குதல் - இடை துவளுதல், துயர் மீக்கூர்தலால் செயலற்றுப் போதல்.

புறம் அஞ்சி உள்ளிழுங்கும் - புறத்தே உள்ளோர்க்கு அஞ்சி உள்ளத்திற்குள்ளேயே குமைதல். சில நாட்களே கணவனோடு வாழப்பெற்றும், அவனை மறத்தற் கியலாதுயரம் பெற்றது பிறர் எள்ளற் குரியதாகலின், அவர்தம் எள்ளலுக்கு அஞ்சுதலால் உள்ளத்தே வருந்தினாள் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/89&oldid=1221489" இலிருந்து மீள்விக்கப்பட்டது