பக்கம்:நூறாசிரியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

67

உலகத்துப் புரையாகின்று பொலிவுறு வாழ்வு - புரையாகின்றமை நோக்கி உலக வாழ்வு முன்பு திண்மை மிக்கதாக விருந்தமை உணரப்பெற்றது. புரைதல்-உள்ளிடு குறைந்து பொள்ளென்றாதல். பொள்ளுதல்-தொளையுடையதாயிருத்தல், புள்-பொள்+து:பொத்து-பொந்து= தொளை.

புள்-புளை.புழை-புரை=உள்ளீடறுதல்.

பொலிவுறு வாழ்வு என்று கருத்துப் பொருளைக் காட்சிப் பொருளாக்கியது, தோற்றமே வேண்டாததொன்றாகலின் அதனுள் துலங்குதலும் அறவே வேண்டாததொன்றாம் என வலியுறுத்துவான் வேண்டி என்னை? தோற்றத்திற்கும் பயனுக்கும் வேறுபாடில்லையோ எனின், உண்டு; அவ்வகை வேறுபாடுற்ற பொருள் எட்டிபோல் துய்ப்பதற்காகாதென்க. இனி, பலாப்போல் துய்ப்புப் பொருள்களிலும் வேறுபாடு தோன்றுவதென்னை எனின், அஃதொன்றே அத் துய்ப்புப் பொருளுக்கு அரணாக நின்றது கண்டு கொள்க. அஃது எட்டித் தோற்றம் போல் வேட்பித்து ஊறுபடுத்தாது, வேட்பியாது நலம் பயப்பதாகியதை உய்த்துணர்க. இனி, வேட்பியாத தோற்றம் நலம் பயக்குமாறு போல் காட்சியளவானே பொலிவு குன்றிய உலகு நலம் பயவாது போவதேன் எனின், பொலிவு என்பது மருள் நீங்கிய மாசறு காட்சிக் குரியதாகலின், அத்தகையோர்க்குத் தோன்றுவதே அன்றி, இருள் தேங்கிய இழிவுறு காட்சியோர்க்குத் தோன்றுவதே ஈண்டுக் குறிக்கப்பெற்றதாம் என்க. இருண்ட அகக்கண் பெற்றோர்க்குத் தோன்றும் பொலிவும், ஒள்ளியார்க்குத் தோன்றும் பொலிவும் வேறு வேறாம் என்க. ஈண்டுப் புறத்தே பொலிவு நிரம்பியதாக இருளோரும், மருளோரும் காண்பதாகிய இவ்வுலக வாழ்க்கை, அகத்தே புரையோட்டம் உளவாக அருளோரும், தெருளோரும் காண்பதற்குரியதாக உள்ளது என்பது வலியுறுத்தப் பெற்றது.

மண்ணாகின்றே மனனே! - நிலைகுலையாத மனம், நிலை குலையும் மண்போலும் ஆகியது. மனம்-மன் என்னும் அடி நிலை கொண்டது. மன் - நிலைத்தல் நிலைத்தல் உடையதாகலின் 'மனம்' என்னும் பெயர் பெற்றது. என்னை? நிலையா வொன்றை நிலைத்தல் என்றது ஏன் எனில், அது நிலையா நிற்றல் கொண்டே நிலையாமை வாய்ந்தது எனக் கருதல் வேண்டா வென்பது குறித்தும், முயற்சியின் நிலைக்கும் திறன் வாய்ந்ததாகும் என்பது குறித்தும், உறுதிப் பொருளும், பண்பும் தோன்ற மனம் என்றனர் முந்து நூல் கண்ட முதுவோர். மெய்யறு தோற்றத்தை மெய் என்றாற் போலவோ எனில் அற்றன்று. உயிர் இவ்விடத்தே உறையுள் கொண்டது. மெய்யே எனத் தேற்றலான் உடலை மெய் என்றனர். என்னை? காண்பொருளாகிய உடலின் வெளிப்பாடு கொண்டே காணாப்பொருளாகிய உயிரின் உண்மை உணரப் படுதலின் மெய் என்றனர், தூசறு உணர்வால் துலங்கத் தோற்றிய மாசறு காட்சியின் மதிமன நுண்ணியர். இனி, நிலைக்குரிய தன்றிதன் தன்மை, நிலைக் குரியதே என வலியுறுத்துவான் வேண்டி இப் பொருளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/93&oldid=1221498" இலிருந்து மீள்விக்கப்பட்டது