பக்கம்:நூறாசிரியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

69

யடைதல் இயல்பாயிற்றென்க. ஆயின் இக்கால் மனமும், அறிவும் முகிழ்வின்றி உடல் மட்டும் முதுமை யற்றது இழி நிலை என்க. முகிழ்விறந்ததுமலர்ச்சியுற்றது.

இளையோர் இளமை எழில் குலைந்தன்று - இளமை எழில் குலுங்குவதாய ஒரு பருவம் எழில் குலைதலால் இளமை சாம்பிற் றென்க, முதுமை மலர்ச்சி யறுதலால் அதன் வழிபட்ட இளமையும் எழில் குலைந்த தென்க. வித்து விளைவின்றி, செடி பொலிவுறாதாகலின், முதுமை முகிழ்ச்சியற, இளமையும் குலைவுற்றதென்க.

பெண்டிர் பெண்மை பெட்பிறந்தன்றே பெட்பு:வேட்கப் படுவதாந் தன்மை, இத் தன்மை அறுதலின் பெண்மையும் அற்ற தென்க, பெண்மை அறின் உலகம் மறவழிப் படுமென்க.

ஆடவர் ஆண்மை அறக்குலைந் தன்று - ஆண்மை ஆளுதல் தன்மை, ஆண்மை குறைவுற்ற தென்க. ஆண்மையும் பெண்மையும் நிறைவுற விளங்காமற் போமாயின் உலகு மறவுணர்வால் அழிக்கப் பெறுமென்க.

அறம் கூனின்று- அறம் கூனுத லுற்றது. கூன் வளைவு-குல்-குன்கூன். குல்லென் வேரடியில் நூற்றுக் கணக்கான சொற்கள் வளைதற் பொருளில் தோன்றியிருப்பதை மொழிப்பேரறிஞர் தேவநேயப்பாவாணரின் தமிழ் வரலாறு” என்னும் நூலிற் கண்டு கொள்க

பொருளரசாணையின் மறந்தலை நிமிர்ந்தன்று- பொருள் அரசு கொண்டு ஆனை (அதிகாரம்) செலுத்துதலின் மறம் தலை தூக்கிற்று என்க. நிமிர்தல் ஏக்கழுத்தம் பெறல்

மான் இழிந் தன்று - மானம் இழிநிலை யுற்றது. ஆண்மை குலைந்து, அறங் கூனி, பொருள் அரசோச்சி, மறம் தலை நிமிரவே மானமும் இழிந்து போன தென்க.

மணஞ்செய் கோலத்து மாண்பிழந் தன்றே- மணம்- இணையப் பெறும் தன்மை, மணத்தல்-இணைதல் சேர்தல், மள் என்ற வேரடியாகப் பிறந்த சொல், மள்-மண்சேர்ந்தது. மண் துகள் ஒன்றோடொன்று சேர்தலின் மண் எனப் பெயர் பெற்றது. சேராத மண் துகள்கள் உடையது மணல், மண்+ அல் = மணல், மள்+து- மண்டு, மண்டுதல் சேர்தல், நிறைதல். ஆண் பெண் சேர்தவின் மணம்’ என்றாயிற்று. இம் மன நிகழ்ச்சியில் இக்கால் பெருமை இலதென்க. ஆணும் பெண்ணும் இணைதல் உடலுறு புணர்ச்சியின் அடியில் மட்டுமன்றி உளமுறு புணர்ச்சியிலும் அடியொற்றிய தாகலின், புள்ளினும் விலங்கினும் நடைபெறும் சேர்க்கையைவிட மாந்தச் சேர்க்கை பெருமை பெறுவதாயிற்று. ஈண்டோ, இந்நிலை மனப்புணர்வின் வழியின்றி நேர்வதால் மாண்பிறந்த செயலாயிற்றென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/95&oldid=1223713" இலிருந்து மீள்விக்கப்பட்டது