பக்கம்:நூறாசிரியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நூறாசிரியம்


கணவன் மனைவியர் கட்டவிழ்த் தன்றே - மனம் பிணிக்காத மண மாகலின் கணவன் மனைவியர் கட்டு அவிழ்கின்ற நிலையாயிற்றென்க. கட்டுதல்-மணத்தல், மணத்திற்கு அடையாளப் பொருளாகிய தாலியையும் குறிக்குமென்று கொள்க. வெறும் உடலால் பிணிக்கப் பெற்ற கட்டு உடற் சூடு தணிந்த பின் அவிழ்தல் போல் மனக் கட்டு அவிழா தென்க. இக்கால் நடைபெறும் மணக் கட்டு மனக் கட்டன்றாக நிணக் கட்டாகலின் அஃது அவிழப் பெறுதல் இயல்பாயிற்று. நிணம்-கொழுப்பு-தசை-அரத்தம் இவற்றால் அமைந்த உடல்

அறிவியல் உடலியல் அடி இழிந்தன்றே -அறிவியல் பூதவியல், வேதியியல் முதலாய அடிப்படை நின்ற உண்மையியல். இவ்வறிவுகளான் தெளிந்து தேரப் பெற்ற உண்மைகளும், அவை கொண்டு நிறுவிய பல்லாயிரக் கணக்கான ஆக்கங்களும் மாந்தரின் வெறுமை நலத் துய்ப்புக்கே பயன்படுத்தப் பெற்று மேனோக்கம் இன்றிக் கீழ்மையுற்ற தென்க. என்னை? ஒளிக்கும் ஒலிக்கும் அடியாய மின்னும், அனற்கும் புனற்கும் அடியாய விண்ணும் அறிவியலால் வயப்படுத்தப்பெற்று மாந்தரின் உடல் துய்ப்புக்கே உதவுவன அன்றி, உளத் துய்ப்புக்குப் துணை நில்லாமை ஊன்றி உணர்க.

பொறியியல் மக்களின் பொறியரிந் தன்றே - கருவியறிவும் , புதுப் புனைவுகளும் மக்களின் ஐம்புல வுணர்களையும் குன்றச் செய்து, ஐம்பொறிகளையும் செயலறும்படி செய்தனவே யன்றி, மற்று அவற்றின் வளர்ச்சிக்குப் பயன்படாமை ஊர்திகள், ஆடிகள் முதலாய காட்டுப் பொருள்களால் நாட்டிக் கொள்க.

கான்படு விலங்கின் .... நோக்கியே - கான்படு விலங்கு என்று அடை தந்து பிரித்தது, மனைபடு விலங்குகளாய நாய், பூனை, குதிரை, மாடு முதலாய விலங்குகள் வாழ்வு பயன்படுதலும், கான்படுவனவாய அரிமா, வரிமா, கரிமா, நரிமா முதலாய விலங்குகளின் வாழ்வு பயன்படாமையும் காட்டுவான் வேண்டி அவை வாழ்வு பயன்படாமை கருதி, அவற்றின் ஒவ்வொரு முனைவும் அவற்றின் ஊன்வளர்ச்சிக்கான முனைவே என்றறிக. அத்தகைய முனைவே போல் இற்றை மாந்தரின் முயல்வும் எவ்வகை மாட்சியும் பெறாததாகி இழிந்தது என்க.

இவ்வகையாகிய தேர்ந்து கொள்ளப் பெறாத வாழ்க்கைக்கு மாந்தர் முயல்வு மாறுபட்டு வருதல் ஆரா விருள் சேர்ந்த அழிநிலைக்கு வழியாம் என்க. அவ்வழிநிலை நோக்கி இவ்வுலகம் விரைந்து செல்கின்றதாம் என்க!

தேரா வாழ்க்கை -தேர்ந்து கொளப்பெறாத வாழ்க்கை தேரா வாழ்க்கை என்றதால் தேர்ந்த வாழ்க்கை ஒன்றுண்டு என்பதும். அஃது ஒளி நிரம்பியதாக விருக்கும் என்பதும், அஃது ஒன்றே வாழ்நிலைக்கு வழிகாட்டுவதாகும் என்பதும் தெளியப்பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/96&oldid=1221507" இலிருந்து மீள்விக்கப்பட்டது