பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

நெஞ்சக்கனல்


"தயவு செய்து ஒரே சமயத்தில் பலபேர் கேள்வி கேட்டால் மறுமொழி சொல்ல முடியாதநிலை ஏற்பட்டுவிடும். கூட்டத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் வேண்டும். ஒவ்வொருவராகக் கேட்பதே நல்லது”–என்று ஒழுங்குப் பிரச்னையை எடுத்துக் கூறினார் தலைவர். யாரும் அதை இலட்சியம் செய்யவில்லை. “கட்சி படிப்படியாக வசதியுள்ளவர்களுக்கு விற்கப்பட்டு விட்டதென்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் ஒரு ஊழியர்.

“கட்சியின் மதுவிலக்குக் கொள்கையில் அறவே நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படிக் கட்சியிலே தீவிர உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்குச் சரியான காரணம் கூறப்படவேண்டும்”–என்று கொதிப்போடு எழுந்து நின்று கேள்வி கேட்டார் ஒரு முதியவர். இந்த நிலைமையைத் தலைவரால் ஒழுங்கு செய்ய முடியாமல் போகவே தாம் எழுந்து நின்று பேசினால் எல்லாரும் அடங்கிவிடுவார்கள் என்று தமக்குத் தாமே ஒரு சக்தி இருப்பதாகக் கற்பித்துக் கொண்ட கமலக்கண்ணன் பேசுவதற்கு எழுந்திருந்தார். அத்தனை எதிர்ப்பும், அத்தனை கேள்விகளும் தனக்காகத்தான் கேட்கப்பட்டன என்பதைக் கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எழுந்து நின்றதும் கூட்டத்தில் அனைவர் முகங்களிலும் வெறுப்புத் தாண்டவமாடியது. முதல் வாக்கியத்தை அவர் தொடங்கியபோதே, எங்கோ ஒருமூலையிலிருந்து யாரோ பேசவேண்டாம், போதும்’ என்பதுபோல் கைதட்டுவது கேட்டது. அடுத்தவாக்கியத்தை அவர் தொடங்குவதற்குள் “தயவு செய்து மன்னிக்க வேண்டும்! தாங்கள் கட்சியில், எவ்வளவு காலமாக உறுப்பினர் என்பதை நாங்கள் அறிய மாட்டோம், தீவிர உறுப்பினரா? சாதாரண உறுப்பினரா என்பது கூடத் தெரியாது எங்களுக்கு, எந்த முறையில் இன்று இந்தக் கூட்டத்தில் நீங்கள் பேச முன் வந்தீர்கள் என்பதும் தெரியவில்லை?”–என்று எழுந்து கூப்பாடு போட்டான் ஓர் இளம் ஊழியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/100&oldid=1048357" இலிருந்து மீள்விக்கப்பட்டது