பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

நெஞ்சக்கனல்


திருந்தும் பிடிவாதமாக ‘இந்தியில்தான் பேசுவேன்’ என்று அங்கே இந்தியில் பேசினார். அந்தப் பேச்சை அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்கும். அங்கு, வந்திருந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மொத்தத்தில் இரண்டொருவருக்கே இந்தி தெரியும். எனவே பேச்சும் கூட்டத்தில் அதற்கிருந்த வரவேற்பும் மந்தமாகவே இருந்தன. டில்லி மந்திரியின் இந்திப் பேச்சையாரோ ஒரு நரைத்தலை மனிதர் தமிழிலே மொழிபெயர்த்துக் கூறினார். கூட்டம் மந்தமாக நடந்து முடிந்தது. முன்னால் கமலக்கண்ணன் நினைத்துப் பயந்தபடி காந்திராமன் அந்தக்கூட்டத்திற்கே வரவில்லை.

கூட்டம் முடிந்ததும் ஆர்வமும் உற்சாகமும் நிறைந்த இளந்தலை முறைப் பத்திரிகை நிருபர் ஒருவர் டில்லி மந்திரியை வழிமறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்.

“நீங்கள் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இங்கிருந்தவர்களில் பலருக்குப் புரிந்திருக்கும்.”

“ஆங்கிலம் விதேசி மொழி! அது இந்த நாட்டில் தொண்ணூற்றெட்டு சதவிகிதம் மக்களுக்குத் தெரியாது...”

“அப்படியல்ல! பல ஆண்டுகளாக இந்த நாட்டுமொழிகளில் ஒன்றாக நம்மோடு இணைந்திருக்கிறது ஆங்கிலம், உலக ஒற்றுமைக்கே வழிவகுக்கிறது ஆங்கிலம். மற்ற மொழிகளோ ஒரு மாநில ஒற்றுமைக்கே துணைசெய்வதில்லை. உதாரணமாக உங்களையே எடுத்துக்கொள்ளுவோம். தனிப்பட்ட முறையிலும், சொந்தமாகவும் உங்களிடம் யார் பேசினாலும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகிறீர்கள். ஆனால் கூட்டங்களில் மட்டும்.வறட்டுப் பிடிவாதத்தோடு இந்தியில் பேசுகிறீர்கள்...”

“யூ ஆர் டாக்கிங் டூ மச் கீப் யுவர் லிமிட்ஸ்”... என்று உணர்ச்சிவசப்பட்டு நிருபரை கோபித்துக்கொண்டார் ரமேஷ்சிங். என்ன காரணத்தாலோ அந்த இளம் நிருபர் டெல்லி மந்திரியை மடக்கியதை விரும்பி உள்ளுர மகிழ்ந்தார் கமலக்கண்ணன். டெல்லி மந்திரியின் மொழி வெறி அவருக்கும் பிடிக்க வில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்கு வட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/148&oldid=1049059" இலிருந்து மீள்விக்கப்பட்டது