நா. பார்த்தசாரதி
185
எதையும் காண்பித்துக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டார்.
“நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்”–என்று கட்சியிலிருந்தோ, மந்திரி சபையிலிருந்தோ யாராவது ஒருவர் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடுமென்றுகூட அவரால் எதிர்பார்க்க முடியவில்லை. பணமும், காரும், பங்களாவும், வீடும், வேண்டியபோதெல்லாம் தன்னைத் தேடித் தேடிக் கும்பிடு போட்ட கட்சி ஆட்களும், காரியக்கமிட்டி உறுப்பினர்களும்–இப்போது ஏன் அறவே தன்னை ஒதுக்கியும், விலக்கியும் ஓடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வேதனைப்பட்டார் கமலக்கண்ணன்.
மாலை ஆறே முக்கால் மணிக்கு அவர் முதலமைச்சர் வீட்டுக்குப் புறப்பட்டார். முதலமைச்சர் வீட்டு வராந்தாவில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
கமலக்கண்ணன் கையில் முதலமைச்சரிடம் கொடுப்பதற்கான கடிதத்தோடு போர்டிகோவில் காரை விட்டு இறங்கியபோது–வராந்தாவில் வட்டம் போட்டுக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருடைய கண்களும் திரும்பிப் பார்த்தன. கமலக்கண்ணன் அவர்களுடைய வணக்கங்களையோ, கைகூப்புதல்களையோ, பொருட்படுத்தாமல் படியேறி உள்ளே நுழைந்தார்.
முதலமைச்சர் தமது அறையில் தயாராகக் காத்திருந்தார். கமலக்கண்ணன் உள்ளே நுழைந்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார். ஆனால் கமலக்கண்ணன் உட்காரவில்லை.
“திஸ் இஸ் மை ரெஸிக்கனேஷன் லெட்டர்”–
முதலமைச்சர் ஒன்றும் பதில் சொல்லாமல் அதை வாங்கிப் பிரித்துக்கொண்டே கேட்டார்:–
“நான் இதைப் படிக்கிறவரை தயவுசெய்து இருக்க முடியுமா?”