பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60




"இவரு மட்டும் என்ன? அன்னிக்கி நான் அம்மன் கோயில்லே வச்சி, பேப்பர்லெ வாசிச்சிக் காட்டலே? நம்ம மந்திரி இருக்கிறாரே, அவருகூட இப்படித்தான் பேசியிருக்காரு. கெவுருமிண்டு. உத்தியோகஸ்தருங்க சம்பளத்தை உசத்திக் கேட்டா, அதிகச் சம்பளம் குடுத்தா, சினிமாவுக்குப் போய்க் கெட்டு போவே, பீடி குடிச்சிச் சீரழிந்து போவே அப்படின்னு இப்படின்னு சொல்லியிருக்காரு, அது மாதிரி தான் இருக்கு இவரு பேச்சும்!" என்று வடிவேலு முதலியார் தமது அங்கலாய்ப்பையும் தெரிவித்துக் கொண்டார்.

"பசிச்சி அழுது ஒருவாய்ப் பருக்கை கேட்டா, அதிகம் சாப்பிட்டா அஜீர்ணம்னு புத்தி புகட்டவர்ர கதையாயிருக்கு அண்ணாச்சி" என்று உவமான பூர்வமாக உண்மையை விளக்கினார் வேறொருவர்.

தறிகாரர்களுக்கிருந்த வயிற்றெரிச்சலில் வாய் ஓய்வதாயில்லை. வெகுநேரம் வரையிலும் பேசாதிருந்த ஒரு தொழிலாளி திடீரென்று ஒரு வாக்கியத்தை, கஷ்டப்படுகிற காலத்தில் பலரும் சொல்லிக் கொள்ளும் சமாதான மொழியைக் கூறினார்.

"ஆனைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வரும்.

இதைக் கேட்டவுடன் வடிவேலு முதலியாருக்கு எரிச்சல்தான் பொத்துக் கொண்டு வந்தது.

"வரும் வரும்னு சொல்லிக்கிட்டிருந்தா, கதை நடக்காது தம்பி மயிலே மயிலேன்னா இறகுபோடுமா? நாம எல்லாரும் நமக்குள்ளே ஒத்துமையில்லாமெ, நவக்கிரகங்கள் மாதிரி மூலைக்கு ஒருத்தரா, வக்கரிச்சிக்கிட்டு இருக்கப்போய்த்தான் இவனும் நம்மகிட்ட மச்சான் முறை கொண்டாடுதாங்க" என்று ஆக்ரோஷத்தோடு பேசினார் அவர்.